Last Updated : 28 Oct, 2022 09:52 PM

 

Published : 28 Oct 2022 09:52 PM
Last Updated : 28 Oct 2022 09:52 PM

புதுச்சேரி | 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி - பெண் பணியாளர் பாதுகாப்பை உறுதிசெய்ய புகார் குழு

புதுச்சேரி: புதுச்சேரியில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி தந்துள்ளது. பெண் பணியாளர் பாதுகாப்பை உறுதி செய்ய புகார் குழு கட்டாயம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அனுமதியுடன் சார்பு செயலர் முத்துமீனா பிறப்பித்துள்ள உத்தரவில், "வணிகம் எளிதாக செய்ய சீர்த்திருத்த செயல் திட்டத்தை மேம்படுத்தவும், சிறந்த சேவைகளை அடையவும் புதுச்சேரி அரசு தொழிலாளர் சட்டங்கள் எளிதாக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பு கோரிக்கையின் அடிப்படையில் புதுச்சேரியில் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

இந்த நடைமுறை 3 ஆ்ண்டுகள் அமலில் இருக்கும். இந்த அனுமதியானது புதுச்சேரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1964-ன் விதிகளை சமரசம் செய்யாமல் தரப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இது பொருந்தும். பணியாளர்கள் ஏதேனும் விடுமுறையில் அல்லது சாதாரண பணி நேரத்திற்குப் பிறகு, கூடுதல் நேரம் சரியாக குறிப்பிடாமல் பணிபுரிவது கண்டறியப்பட்டால், முதலாளி அல்லது மேலாளர் மீது புதுச்சேரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண் ஊழியர்கள் எந்த நாளிலும் இரவு 8.00 மணிக்கு மேல் வேலை செய்யத் தேவையில்லை. குறிப்பாக, பெண் ஊழியர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற்ற பிறகு, வேலை வழங்குபவர் அவர்களை இரவு 8.00 மணி முதல் காலை 6.00 மணி வரை பணிபுரிய அனுமதிக்கலாம். பெண் ஊழியர்களின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பிற்கு போதுமான நடவடிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும்.

இதற்கான அறிவிப்பு, போக்குவரத்து வசதிகள் இருப்பதைக் குறிக்கும் வகையில், நிறுவனத்தின் பிரதான நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். பணியாளர்களுக்கு ஓய்வறை, கழிவறை, பாதுகாப்பு பெட்டகங்கள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டும். பெண் ஊழியர்களைப் பணியமர்த்தும் ஒவ்வொரு முதலாளியும், பாலினத்தின் கீழ், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக உள்ள புகார்க் குழுவை அமைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x