Published : 28 Oct 2022 08:19 PM
Last Updated : 28 Oct 2022 08:19 PM

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்பு படம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் 7 தமிழக மீனவர்கள் கடந்த 27-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களையும், இவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "IND-TN-10-MM-365 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் நேற்று (27ம் தேதி) மீன்பிடிக்கச் சென்ற ஏழு தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே தமிழக மீனவர்களின் 98 மீன்பிடிப் படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மீண்டும் தாம் வலியுறுத்த விரும்புகிறேன். பாக்ஜலசந்திப் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது, இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்குத் தொடர்ச்சியான அச்சுறுத்தலாகும்.

எனவே, இந்திய மீனவர்கள் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும்போது, இதுபோன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்திட, வலுவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x