Published : 12 Oct 2022 07:53 AM
Last Updated : 12 Oct 2022 07:53 AM

மாதவரத்தில் மெட்ரோ ரயில் இயக்கத்துக்காக சுரங்க கட்டுமானப் பணிகள் தீவிரம்: 52 அடி ஆழம், 492 அடி நீளத்தில் ரயில் நிலையம்

சென்னை: சென்னையில் ரூ.63,246 கோடியில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு வழித்தடம் மாதவரம்-சோழிங்கநல்லூர் (47 கி.மீ. தொலைவு) வழித்தடமாகும். இது41.2 கி.மீ. தொலைவுக்கு உயர்நிலைப் பாதையாகவும், 5.8 கி.மீ.தொலைவுக்கு சுரங்கப் பாதையாகவும் அமைகிறது.

மாதவரத்தில் இருந்து சாஸ்திரிநகர், வில்லிவாக்கம், வளசரவாக்கம், போரூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், எல்காட் வழியாக இந்தபாதை அமைகிறது. இந்த தடத்தில் முதல் சுரங்க மெட்ரோ ரயில்நிலையம், மாதவரம் வேணுகோபால் நகரில் அமைகிறது. இந்தப் பகுதியைச் சுற்றிலும்தடுப்புகள் அமைத்து, ராட்சத கிரேன்கள், கட்டுமானப் பொருட்கள், சாதனங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இரவு, பகலாக தொடர்ந்து பணிகள்நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, "மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் உயர்நிலைப் பாதையில் 42 நிலையங்கள், சுரங்கப் பாதையில் 6 நிலையங்கள் என்று 48 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. பெரும்பாலான ரயில் நிலையங்கள் உயர்நிலைப் பாதையில் அமைவதால், பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளை முதல்கட்டமாக மாதவரத்தில் தொடங்க உள்ளோம். இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மாதவரம் வேணுகோபால் நகரில் முதல் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. நிலத்தில் இருந்து 52 அடி ஆழத்தில், 492 அடி நீளம், 62 அடி அகலத்தில் இந்த மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x