Published : 22 Aug 2022 06:56 AM
Last Updated : 22 Aug 2022 06:56 AM

தாம்பரம் - செங்கல்பட்டு 3-வது பாதையில் மின்சார ரயில் சேவை படிப்படியாக அதிகரிக்கப்படும்: சென்னை ரயில்வே கோட்டம் தகவல்

சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது பாதை ரூ.598 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் ரயில் சேவையை கடந்த மே மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தப் பாதையில் தினசரி சுமார் 20 மின்சார ரயில் சேவை வழங்கப்படுகிறது.

நெரிசல் மிகுந்த நேரங்களில் விரைவு, மெயில் ரயில்கள் இயக்கத்தில் எவ்விதத் தடையும் ஏற்படாமல் இருக்க, இந்த மின்சார ரயில்கள் சில, நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக, சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையில், இந்த சிரமத்தைப் போக்கவும், புறநகர் மின்சார ரயில் சேவை அதிகரிக்கவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. குறிப்பாக, புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3-வது பாதையில் சிக்னல் மற்றும் ரயில் பாதை சீரமைப்புப் பணி வேகமாக நடைபெற்று வந்தது.

இந்தப் பணி முடிந்துபிறகு, ரயில் சேவைகள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணிகள் முடிந்தும் தற்போது வரை மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்படவில்லை. எனவே, மின்சார ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்றும், விரைவு, மெயில் ரயில் இயக்கத்துக்காக இடையில் நிறுத்தக் கூடாது என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட பயணிகள் ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினர் பாஸ்கர் கூறியதாவது: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி உள்ளிட்ட முக்கிய நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. படிப்புக்காகவும், வேலைக்காகவும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

இவர்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்ய கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். தற்போது வரை மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்படவில்லை. உடனடியாக, சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரியிடம் கேட்டபோது, “தாம்பரம் - செங்கல்பட்டு 3-வது பாதையில் பணி முடிந்தபிறகு, தினசரி 10 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிக்னல், பாதை சீரமைப்புப் பணிகள் நடந்து வந்தன. இனி படிப்படியாக சேவை அதிகரிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x