Published : 08 Aug 2022 07:09 AM
Last Updated : 08 Aug 2022 07:09 AM

கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு சரியான இடத்தில் நடக்கவில்லை: தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் வேதனை

அமர்நாத் ராமகிருஷ்ணன்

திருப்புவனம்: கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வுக்கு சரியான இடத்தை தேர்வு செய்து நடத்தவில்லை என தென்னிந்திய ஆலயத் திட்ட மத்திய தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கீழடி பகுதியில் 110 ஏக்கரில் தொல்லியல் மேடு அமைந்துள்ளது. ஆனால், தற்போது நடக்கும் அகழாய்வு சரியான இடத்தில் நடக்கவில்லை. நாங்கள் ஆய்வு செய்த பகுதியிலேயே தொடர்ந்து அகழாய்வு நடந்திருந்தால் பலதொல்பொருட்கள் கிடைத்திருக்கலாம்.

அகழாய்வில் அனுபவம் உள்ளவர்களையே பணியமர்த்த வேண்டும். அப்போதுதான் சரியான முடிவு கிடைக்கும். எங்களுடைய முன் அனுபவத்தால்தான் சரியான இடத்தைத் தேர்வு செய்ய முடிந்தது. நாங்கள் ஓராண்டாக வைகைநதியில் பயணம் செய்து கீழடியைத் தேர்வு செய்தோம்.

கீழடி நமக்குக் கிடைத்த பெரிய அளவிலான தொல்லியல் பகுதி. அந்த இடத்தை முழுமையாக அகழாய்வு செய்ய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். மேலும் எந்தெந்த இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும் என்பதை முறையாக ஆய்வு செய்தபிறகே பணியைத் தொடங்க வேண்டும். அப்போதுதான் எதிர்பார்த்த ஆதாரங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

வரும் செப்டம்பரில் அகழாய்வுப்பணி முடிவடைய உள்ள நிலையில், இதுவரை மணலூரில் அகழாய்வுப் பணி தொடங்கப்படவில்லை. இந்தநிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணனின் கருத்து தொல்லியல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x