Published : 11 Jul 2022 11:06 AM
Last Updated : 11 Jul 2022 11:06 AM

அதிமுக வரவு செலவு கணக்கை வாசித்தார் சி.விஜயபாஸ்கர்: நிலை வைப்புத் தொகை ரூ.244 கோடி 

சி.விஜயபாஸ்கர்

சென்னை: அதிமுக வரவு செலவு கணக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாசித்தார்.

அதிமுக பொதுக் குழு கூட்டம் வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ளவில்லை. இதன் காரணமாக அதிமுக வரவு செலவு கணக்கை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாசித்தார்.

இதன்படி அதிமுகவின் பெயரில் வங்கிகளில் நிலை வைப்புத் தொகையாக ரூ.244 கோடி உள்ளது. 9.1.2021 முதல் 22.6.2022 வரை அதிமுகவிற்க ரூ.53 கோடி வரவாக வந்துள்ளது. இந்த காலத்தில் ரூ.62 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பொதுக்குழுவைக் கூட்ட பெரும்பான்மையான உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும், 11 ஆம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட கடந்த ஜூன் 23 ஆம் தேதியே முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட தடையில்லை என்று தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவு பிறப்பித்தார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முதலில் காலை 9.15 மணிக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றபடவுள்ள 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த செயற்குழு கூட்டம் 10 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது. சரியாக 9.25 மணிக்கு செயற்குழு நிறைவு பெற்றது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 4 மாதங்களில் பொதுக் குழு செயலாளர் தேர்தல் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x