Published : 11 Jul 2022 09:15 AM
Last Updated : 11 Jul 2022 09:15 AM

குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள படகு குழாமில் படகு சவாரியை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், எம்எல்ஏ பழனி ஆகியோர் தொடங்கிவைத்து படகு சவாரி செய்தனர். (வலது) ஐந்தருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குற்றாலம், செங்கோட்டை, தென்காசி உட்பட மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 3 மி.மீ., குண்டாறு அணையில் 1 மி.மீ. மழை பதிவானது.

கடனாநதி அணை நீர்மட்டம் 57 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 70.50 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 55.50 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கருப்பாநதி அணை நீரின்றி வறண்டு கிடக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,055 கனஅடி நீர் வந்தது. 805 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 59.65 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 73.36 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 84 கனஅடி நீர் வந்தது. 375 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 74.50 அடியாக இருந்தது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 16 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.52 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 42.75 அடியாகவும் இருந்தது.

அருவிகள் ஆர்ப்பரிப்பு

தொடர் சாரல் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அருவிகளில் அவர்கள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் ஐந்தருவி சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் விரைந்து சென்று, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

தொடர் மழையால் ஐந்தருவி சாலையில் உள்ள படகுக்குழாமில் நீர் நிரம்பியதையடுத்து, அங்கு படகு சவாரி தொடங்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தென்காசி தொகுதி எம்எல்ஏ எஸ்.பழனி ஆகியோர் படகு சவாரியை நேற்று தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் படகு சவாரி செய்தனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் டேவிட் பிரபாகர், மேலாளர் ராஜேஸ்வரி, பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் கடந்த 1993-ம் ஆண்டு முதல் குற்றாலத்தில் சாரல் காலத்தில் படகு சவாரி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020, 2021-ம் ஆண்டு கரோனா பரவல் காரணமாக படகு சவாரி நடத்தப்படவில்லை.

2 ஆண்டுகளுக்கு பின்னர் படகு சவாரி தொடங்கியி ருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இங்கு இருநபர் மிதி படகுக்கு ரூ.150, நான்கு நபர் மிதி படகுக்கு ரூ.200, நான்கு நபர் துடுப்பு படகுக்கு ரூ.250, தனிநபர் படகுக்கு ரூ.150 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x