Published : 29 Jun 2022 06:31 AM
Last Updated : 29 Jun 2022 06:31 AM

குரூப் 4 தேர்விலும் தமிழ் தாளில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்களிக்க கோரிக்கை

செவித்திறன் குறைபாடுடையவர்களின் பெற்றோர்கள் சங்கத்தின் தலைவர் உஷா, செயலாளர் கவிதா உள்ளிட்டோர் குரூப் 4 தேர்வில் இருந்து செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ் மொழித்தாள் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தில் மனு அளித்தனர். செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் அவர்களது பெற்றோர் ஏராளமானோர் மனு அளிக்க வந்திருந்தனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தமிழ் மொழித் தாள் எழுதுவதில் இருந்து, செவித் திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர்களது பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தில், செவித் திறன் குறைபாடு உடையவர்களின் பெற்றோர் சங்கம் சார்பில் நேற்று ஒரு மனு அளிக்கப்பட்டது. பின்னர், இதுகுறித்து சங்கத்தின் தலைவர் உஷா, செயலாளர் கவிதா ஆகியோர் கூறியதாவது:

போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாள் எழுதுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளித்து கடந்த மே 23-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அரசாணை வெளியிடுவதற்கு முன்பு, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதால், இத்தேர்வில் தமிழ் மொழித் தாள் எழுதுவதில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு கிடைக்காது என்று தகவல்கள் வருகின்றன.

செவித் திறன் குறைபாடு உடையவர்கள் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் அல்லது ஆங்கிலம் என ஏதோ ஒரு மொழியில்தான் கல்வி கற்கின்றனர். அவ்வாறு ஆங்கிலத்தில் பயிலும் மாற்றுத் திறன் மாணவர்களால் தமிழ் மொழித் தாள் எழுத முடியாது.

ஏற்கெனவே 2 ஆண்டுகள் கரோனா பரவலால் பாதிக்கப்பட்ட நிலையில், ஜூலை 24-ம் தேதி நடக்க உள்ள தேர்வையும் எழுத முடியாவிட்டால், வயது வரம்பு கடந்துவிடும். எனவே, குரூப் 4 தேர்விலும் தமிழ் மொழித் தாள் எழுதுவதில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குரூப் 4 தேர்வை எதிர்நோக்கியுள்ள செவித் திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி ராமகிருஷ்ணன் கூறும்போது, “பொதுவாக, செவித் திறன் குறைபாடு உடையவர்களை தனியார் நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பது இல்லை. இதனால், அரசுத் தேர்வுகளைத்தான் முழுமையாக நம்பி, கடந்த 5 ஆண்டுகளாக தேர்வுக்கு தயாராகி வருகிறோம். செவித் திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் ஏராளமானோர் இத்தேர்வுக்காக காத்திருக்கின்றனர். எனவே, அரசு விலக்கு அளிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x