Last Updated : 25 Feb, 2022 06:55 PM

 

Published : 25 Feb 2022 06:55 PM
Last Updated : 25 Feb 2022 06:55 PM

உக்ரைனில் படிக்கும் எங்கள் பிள்ளைகளை மீட்க நடவடிக்கை எடுங்கள்: முதல்வருக்கு சேலம் பெற்றோர்கள் கோரிக்கை

உக்ரைனில் சிக்கிக் தவிக்கும் சேலம் மாணவர்கள்

சேலம்: சேலம் மாவட்டத்தில் இருந்து உக்ரைனில் படிக்க சென்ற மாணவ, மாணவியரை பத்திரமாக மீட்டு வர முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் செல்லியம்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் ரித்திகா உக்கரைனில் நான்காம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். ”தற்போது, உக்ரைனில் ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள எனது மகள் ரித்திகாவை பத்திரமாக மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் முத்துசாமி வழங்கினார்.

மேட்டூர் அருகே உள்ள கோனூர் புதுவேலமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக்,
ஆத்தூர் செல்லியம்பாளையத்தைச் சேர்ந்த ரித்திகா

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோனூர் புதுவேலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரின் மனைவி ரேணுகா. இவர்களது மகன் கார்த்திக் (26) உக்ரைனில் சார்ஜியோ பகுதியில் உள்ள கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். ”வரும் மே மாதம் கார்த்திக் படிப்பு நிறைவு பெற உள்ள நிலையில், உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், கார்த்திக் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். அவரை மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கோரியுள்ளனர்.

நேற்று முன்தினம் அர்ஜுனனிடம் கார்த்திக் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தன்னை உக்ரைனில் இருந்து அழைத்து செல்ல வேண்டும் என பேசினார். இது சம்பந்தமாக அர்ஜூனன், மேட்டூர் சார் ஆட்சியர் வீரபிரதாப் சிங்கிடம், மகனை மீட்டு இந்தியா அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மேட்டூர் அருகே வீரக்கல் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் ஜெயசூர்யா(23), பிரதீப் (22)

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள வீரக்கல் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் - சித்ரா தம்பதினர். நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்களின் மகன்கள் ஜெயசூர்யா (23), பிரதீப் (22) உக்ரைனில் மருத்துவக் கல்வி பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். ஜெயசூர்யா இறுதியாண்டும், பிரதீப் 4-ம் ஆண்டும் படித்து வருகின்றனர். தற்போது உக்ரைனில் போர் நடந்துவரும் நிலையில், தாய் சித்ரா தனது மகன்களை பத்திரமாக மீட்டு வர வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் இருந்து உக்ரைனுக்கு படிக்கச் சென்ற மாணவ, மாணவியர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டு வர முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x