Published : 25 Feb 2022 05:29 PM
Last Updated : 25 Feb 2022 05:29 PM

அந்தக் காவலர் ஓர் உதாரணம்தான்... தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துக: அன்புமணி

கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் காவலர் விஜயகுமார் என்பவர் குடிபோதையில் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். காயம்பட்ட இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர்.

குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு இதை விட கொடுமையான எடுத்துக்காட்டு எதுவும் இல்லை. இது முதல் உதாரணமும் இல்லை... கடைசி உதாரணமும் இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊரிலும் அரசே விற்கும் மதுவால் ஏராளமான குடும்பங்கள் சீரழிகின்றன; ஏராளமான இளம்பெண்கள் கைம்பெண்களாக்கப்படுகின்றனர்; குழந்தைகள் ஆதரவற்றவர்களாகின்றனர்.

இத்தகைய நிலை இனியும் தொடர்வதை அரசு அனுமதிக்கக்கூடாது. அரசின் கஜானாக்கள் ’தொழுநோயாளிகளின் கைகளில் உள்ள வெண்ணெய்’களால் நிரப்பப்படக்கூடாது. அதனால், தமிழகத்தில் ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x