Published : 04 Feb 2022 09:17 AM
Last Updated : 04 Feb 2022 09:17 AM

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றாத வரை பலன் இல்லை: முன்னாள் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் கருத்து

விழுப்புரம்: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியிருக்கும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாகவிழுப்புரத்தில் நேற்று மாலை முன்னாள் சட்டத்துறை அமைச்சர்சிவி சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீட் தேர்வில் விலக்கு கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம், இந்தியா முழுவதும் நீட் தேர்வு தான் பின்பற்றப்படும் என தீர்ப்பு வழங்கியது. தமிழக ஆளுநர் எழுப்பி உள்ள கேள்வியும் இதை சுட்டிக்காட்டுகிறது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, நிறைவேற்றாத வரையில் எந்தப் பலனும் ஏற்பட போவதில்லை. மக்களை, மாணவர்களை ஏமாற்றிஅரசியல் செய்யாமல் திமுக செயல்பட வேண்டும் .

நீட் தேர்வு கொண்டு வந்தபிறகு, தமிழகத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மூலம்சட்டமியற்றபட்டப் பிறகு கடந்த ஆண்டு 436 மாணவர்களும், நடப்பாண்டில் 537 மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

நீட் காரணமாக அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டத்தால் 6 மாணவர்கள் சேர்ந்த இடத்தில் 537 அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

ஆட்சியிலும், அதிகாரத்திலும் 39 மக்களவை உறுப்பினர்களை வைத்து கொண்டு எதுவும் செய்ய முடியாமல் திமுக அரசு உள்ளது. காலம் தாழ்த்தாமல், மக்களை ஏமாற்றாமல், மாணவர்களை குழப்பாமல் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சிவி சண்முகம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x