Published : 31 Dec 2021 03:44 PM
Last Updated : 31 Dec 2021 03:44 PM

இந்தியாவை இலங்கை பொருட்படுத்துவது இல்லையோ? - மீனவர் பிரச்சினையில் அன்புமணி சந்தேகம்

சென்னை: "இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விரைந்து மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், "இலங்கைக்கு ஆயிரமாயிரம் உதவிகளை செய்தாலும் இந்தியாவை இலங்கை பொருட்படுத்துவதில்லையோ?” என்று அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 43 பேரின் நீதிமன்றக் காவலை வரும் ஜனவரி 13-ம் தேதி வரை நீட்டித்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. மீதமுள்ள 26 மீனவர்களின் காவலும் நாளைக்குள் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மீனவர்களின் விடுதலையை எதிர்பார்த்த நிலையில் இம்முடிவு அதிர்ச்சியளிக்கிறது.

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 55 மீனவர்கள் கடந்த டிசம்பர் 18ம் தேதி வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த நாளே புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களில் 43 பேரின் நீதிமன்றக் காவல் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதை நம்ப முடியவில்லை.

அதேபோல் மீதமுள்ள மீனவர்களின் காவலும் நாளைக்குள் அடுத்தடுத்து நீட்டிக்கப்படவுள்ளன. இது ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளன; மீனவர் குடும்பங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டவுடன் பாட்டாளி மக்கள் கட்சிதான் அதைக் கண்டித்ததுடன், சம்பந்தப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்து மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

அதன்பின் கடந்த 22-ம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நான் டெல்லியில் சந்தித்து, இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமைமீறல் குறித்தும், அவர்களை விரைவாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினேன். அவரும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதனால் மீனவர்கள் விரைவாக வீடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

இந்திய அரசு கேட்டுக் கொண்ட பிறகும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்காமல் காவலை நீட்டித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இலங்கைக்கு ஆயிரமாயிரம் உதவிகளை செய்தாலும் இந்தியாவை இலங்கை பொருட்படுத்துவதில்லையோ என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழலில் வரும் 10ம் தேதி குஜராத்தில் தொடங்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இலங்கை நிதி அமைச்சரும், அதிபர் கோத்தபாயாவின் சகோதரருமான பசில் ராஜபக்சே சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருக்கிறார். இந்தியாவின் வேண்டுகோள்களை இலங்கை கிள்ளுக்கீரையாக கருதும் போக்குக்கு முடிவு கட்டப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்யும்படி இலங்கையிடம் கண்டிப்பான குரலில் இந்தியா கூற வேண்டும்.

இலங்கைப் படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் வேதனையில் வாடிக் கொண்டு இருக்கிறார்கள். நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட வேண்டிய ஆங்கிலப் புத்தாண்டு நாள் அவர்களைப் பொறுத்தவரை வேதனையான நாளாக மாறியிருக்கிறது. ஜனவரி 13-ம் நாளுடன் நீதிமன்றக் காவல் முடிவடைந்த பிறகாவது அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா என்பது தெரியவில்லை. அவ்வாறு விடுதலை செய்யப்படாவிட்டால் அவர்கள் பொங்கல் திருநாளைக் கூட கொண்டாட முடியாது. அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு மத்திய, மாநில அரசுகள் இடம் கொடுத்திவிடக் கூடாது.

தமிழ்நாட்டு மீனவர்கள் அனைவரும் அடுத்த சில நாட்களில் சொந்த ஊர் திரும்பி தமிழர் திருநாளைக் கொண்டாட வசதியாக மீனவர்கள் 69 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; இதுவரை பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 75 மீன்பிடி விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் இந்தியா உறுதியாக தெரிவிக்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x