Published : 31 Dec 2021 01:57 PM
Last Updated : 31 Dec 2021 01:57 PM

மோசடி நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமா? - எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி

ஐ.பெரியசாமி

திண்டுக்கல்

நகைக்கடன் தள்ளுபடி விவகாரத்தில் உண்மைக்கு மாறானதை எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. மோசடி செய்தவர்கள், விதிமுறைக்கு உட்படாதவர்கள் மட்டுமே கடன் தள்ளுபடி வழங்காமல் நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"நகைக்கடன் தள்ளுபடியை குறைவாக கொடுத்துவிட்டது போல் எதிர்க்கட்சிகள் சித்தரிக்க முயல்கின்றன. இது உண்மைக்கு மாறானது. கடும் நிதி நெருக்கடியிலும் தமிழக முதல்வர் நகைக்கடன் தள்ளுபடியை செய்துள்ளார்.

நகைக்கடன் தள்ளுபடி பெறவேண்டும் என்ற உள்நோக்கத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டையை வாங்கிச் சென்று நகை அடகு கடைக்காரர்கள் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ரத்தன்லால் என்பவர் 672 கணக்குகளில் நகைக்கடன் வாங்கியுள்ளார். அனைத்தும் ஐந்து பவுனுக்கு கீழே உள்ளவை. இவருக்கு எப்படி தள்ளுபடி செய்ய முடியும்? இவர் மக்களின் பணத்தை திருட முயற்சித்துள்ளார். அதை சரி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறாரா?

நகையே இல்லாமல் வெறும் பொட்டலத்தை மட்டும் பையில் வைத்து தூத்துக்குடி மாவட்டம் குரூம்பூரில் 2 கோடி ரூபாய் அளவுக்கு சிலர் கடன் பெற்றுள்ளனர். சில இடங்களில் கவரிங் நகைகளை வைத்தும் கடன் வாங்கியுள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எப்படி தள்ளுபடி செய்ய முடியும்?

கூட்டுறவு சங்கங்களில் மொத்தம் 48,84,726 நகைக்கடன்கள் பெறப்பட்டுள்ளன.

இதில் 7,65,738 நகைக்கடன்கள் தனி நபர்கள் 40 கிராமுக்கு மேலாக வாங்கியவை, 21,03,441 நகைக்கடன்கள் அனைத்தும் ஒரே குடும்ப அட்டையில் இடம்பெற்றவர்கள் சேர்ந்து 40 கிராமுக்கு மேலாக வாங்கியவை, 2,20,748 நகைக்கடன்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர்களை பயன்படுத்தி அடகு கடைக்காரர்கள் முறைகேடாக பெற்றவை, 2,13,887 நகைக்கடன்கள் ஏற்கெனவே பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் பலன் அடைந்தவர்கள். 2,33,879 நகைக்கடன்கள் போலி நகை, நகைகளே இல்லாத காலி பொட்டலங்கள் முதலான விதிமீறல்கள் என கண்டறியப்பட்டவை. இவை அனைத்தும் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியில்லாதவையாகும்.

13,47,033 நகைக் கடன்கள் மட்டுமே தற்போது தள்ளுபடிக்கு தகுதியானவை என கண்டறியப்பட்டுள்ளன.

நபர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, 40 கிராமுக்கு உட்பட்டு நகைக் கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 22,52,226 ஆகும். இவர்களில் தற்போது தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் 10,18,066 பேர்"

இவ்வாறு அவர் கூறினார்.

மீண்டும் விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் மேலும் கூறுகையில், நிராகரிக்கப்பட்ட பட்டியலில் தகுதியான பயனாளிகள் இருப்பின் அவர்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படும். அதற்கான உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகினால், அவர்கள் ஆய்வு செய்து தகுதியிருப்பின் நகைக்கடன் தள்ளுபடி பெற பரிந்துரைப்பார்கள். ஏழை மக்கள் பயடைய வேண்டும் என்பதுதான் நகைக்கடன் தள்ளுபடியின் நோக்கம் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x