Published : 29 Dec 2021 06:38 AM
Last Updated : 29 Dec 2021 06:38 AM

திருச்சியில் ரூ.1,084 கோடியில் நலத்திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

திருச்சியில் நாளை (டிச.30) நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.1,084.69 கோடி மதிப்பில் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பஞ்சப்பூரில் ரூ.832 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு முனையம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.

இதில், முதற்கட்டமாக 48 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க ரூ.140 கோடி, 25 ஏக்கர் பரப்பளவில் கனரக சரக்கு முனையம் அமைக்க ரூ.76 கோடி, 152 ஏக்கர் பரப்பளவில் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.75 கோடி, 100 ஏக்கர் பரப்பளவில் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் அமைப்பதற்கு ரூ.59 கோடி என ரூ.350 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்துள்ளது. இத்திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (டிச.30) அடிக்கல் நாட்ட உள்ளார்.

பின்னர், அன்று மாலை தாயனூரிலுள்ள கேர் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத் துறை,உயர் கல்வித்துறை உள்ளிட்டவற்றில் ரூ.254 கோடி மதிப்பிலான 531 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

மேலும் சீர்மிகு திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ள சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட ரூ.153.21 கோடி மதிப்பிலான 203 திட்டங்களை திறந்து வைக்க உள்ளார். அத்துடன், பல்வேறு துறைகளின்கீழ் ரூ.327.48 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

அதன்பின், தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதால் திருச்சி விமான நிலையத்திலிருந்து அவர் செல்லக்கூடிய வழித்தடங்கள், தங்குமிடம், நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் திருச்சி மாநகர காவல்துறையும், மத்திய மண்டல காவல்துறையும் இணைந்து விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x