Last Updated : 15 Nov, 2021 07:12 AM

 

Published : 15 Nov 2021 07:12 AM
Last Updated : 15 Nov 2021 07:12 AM

திடீரென்று ஓட்டுநருக்கு வலிப்பு வந்ததால் கீழே சாய்ந்தார்: பேருந்தில் இருந்த 4 பேரின் உயிரை காப்பாற்றிய ஆண் செவிலியர்

சென்னை

சென்னை அருகே ஆவடியை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (24). சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இதயம், நுரையீரல் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆண் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 11-ம் தேதி இரவு 8.15மணிக்கு பணி முடிந்ததும், வீட்டுக்கு செல்வதற்காக மருத்துவமனையின் மினி பேருந்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். பேருந்தை முருகன் என்பவர் ஓட்டிச் செல்ல, புவனேஸ்வரனுடன் 3 மருத்துவமனை பணியாளர்கள் இருந்தனர்.

நுங்கம்பாக்கம் ஆயக்கர் பவன் (வருமானவரி அலுவலகம்) அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநருக்கு திடீரென்று வலிப்பு வந்து இடது பக்கம் சாய்ந்துள்ளார். இதை கவனித்தபுனவேஸ்வரன் துரித மாக செயல்பட்டு வண்டியின் இயக்கத்தை நிறுத்தினார்.

பின்னர், ஓட்டுநருக்கு முதல்கட்ட உதவிகளை செய்து அப்போலோ மருத்துவமனையில் சேர்த்துள்ளார். புவனேஸ்வரன் விரைவாக செயல்பட்டு வண்டியின் இயக்கத்தை நிறுத்தியதால், பேருந்தில் இருந்த அவர், ஓட்டுநர், 3 பணியாளர்கள் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. புவனேஸ்வரனின் செயலை அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி, மருத்துவர்கள், செவிலியர்கள் பாராட்டியுள்ளனர்.

இது தொடர்பாக ஆண் செவிலியர் புவனேஸ்வரன் கூறியதாவது:

அப்போலோ மருத்துவமனையில் இதயம் மற்றும் நுரையீரல் தீவிர சிகிச்சைப் பிரிவில் 6 மாதங்களாக பணியாற்றி வருகிறேன். தினமும்பணி முடிந்ததும் மருத்துவமனையின் மினி பேருந்தில் சென்ட்ரல் சென்று, அங்கிருந்து ரயில் மூலம்ஆவடிக்கு செல்வது வழக்கம். கடந்த 11-ம் தேதி கனமழை எச்சரிக்கையால் நான் உட்பட 4 பணியாளர்கள் மட்டுமே பேருந்தில் இருந்தோம். திடீரென்று ஓட்டுநர் சத்தம் கேட்டது. அவர் இருக்கையில் அமர்ந்தபடி இடது புறம் சாய்ந்து கிடந்தார்.

வண்டி நின்றுவிட்டாலும், வண்டிஇயக்கத்திலும், கியரிலும் இருந்தது. ஓட்டுநரின் ஒரு கால் க்ளெட்சை அழுத்திக் கொண்டிருந்தது. எனக்குகார் ஓட்ட தெரியும் என்பதால் அவர்தொடையின் மீது அமர்ந்து உடனயாக வண்டியின் இயக்கத்தை நிறுத்தினேன். அவரது கால் க்ளெட்சில் இருந்து விலகி இருந்தால் என்ன நடந்திருக்குமென நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.

பின்னர், நான் ஒரு செவிலியர் என்பதால் அவருக்கு வலிப்பு வந்திருப்பதை அறிந்து கொண்டேன். அவர் நாக்கை கடித்ததால், வாய் முழுக்க ரத்தமாக இருந்தது.

மயங்கிய நிலையில் சுயநினைவு இல்லாமல் இருந்த அவருக்கு முதல்கட்ட உதவிகளை செய்தேன். பேருந்தில் இருந்த மற்ற3 பணியாளர்களும் உதவிகளை செய்தனர். அவருக்கு நினைவுதிரும்பியபின், ஆம்புலன்ஸ் மூலம் அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். பின்னர், அங்கு வந்த மற்றொரு பேருந்து ஓட்டுநரின் உதவியுடன் நான் எங்களுடைய பேருந்தை இயக்கி சாலை ஓரமாக நிறுத்தினேன். தற்போது, ஓட்டுநர் முருகன் நலமுடன் இருக்கிறார் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x