Published : 28 Oct 2021 05:29 PM
Last Updated : 28 Oct 2021 05:29 PM

இலங்கை தமிழர் நலன்; அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் ஆலோசனைக் குழு: அரசாணை வெளியீடு

அமைச்சர் செஞ்சி மஸ்தான்: கோப்புப்படம்

சென்னை

இலங்கை தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆக. 27ஆம் தேதி 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, "முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கும், வெளிப்பதிவில் உள்ள அகதிகளுக்கும் உரிய உதவிகளை வழங்கிடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், குடியுரிமை வழங்குதல் மற்றும் அவர்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகாலத் தீர்வினைக் கண்டறிய ஏதுவாகவும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர், பொதுத்துறைச் செயலாளர், மறுவாழ்வுத்துறை இயக்குநர் மற்றும் பிற அரசு உயர் அலுவலர்கள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுடைய பிரதிநிதி மற்றும் வெளிப்பதிவில் வசிக்கக்கூடிய அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழு நிச்சயமாக விரைவில் அமைக்கப்படும்" என அறிவித்தார்.

அதன்படி, இலங்கை தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு இன்று (அக். 28) அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையிலான குழுவில், ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்ட வல்லுநர் மனுராஜ் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவாக இது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் குழு, முகாம்களில் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கல்வி - சமூகப் பாதுகாப்பு உதவிக்கு வகை செய்தல், குடியுரிமை, இலங்கைக்கு விரும்பிச் செல்லுதல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிச் செயல்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x