Published : 10 Feb 2016 03:09 PM
Last Updated : 10 Feb 2016 03:09 PM
‘திமுக, அதிமுக இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை’ என, நாமக்கல்லில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
நாமக்கல்லில் பாமக சார்பில் மகளிர் மது ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்து பேசியது:
இந்தியாவிலேயே அதிக மது குடிக்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மதுவினால் அதிக விதவைகள் உள்ள மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இந்தியாவில் சாலை விபத்து, கொலை நடக்கும் மாநிலமும் தமிழகம் தான். இதற்கு காரணம் மது.
தமிழகத்தில் கடந்த 34 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக மருத்துவர் ராமதாஸ் போராடி வருகிறார். கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மது ஒழிப்பு வலியுறுத்தி 22-வது மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் போராட்டம் நடத்தப்படுகிறது.
டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தேர்தலில் மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போட்டால் தான் நடக்கும் என, மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். ஆட்சிக்கு வந்து ஒரு மணி நேரத்தில் நான் போடும் கையெழுத்து பூரண மதுவிலக்கு கையெழுத்துத்தான். திமுகவும், அதிமுகவும் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர். நான் இலவசமாக கல்வி கொடுக்கப் போகிறேன்.
ஆட்சிக்கு வந்த 2 ஆண்டு களில் அனைத்தையும் நிறை வேற்றுவேன். இல்லையெனில் பதவி விலகுவேன். தாலிக்கு தங்கம் கொடுக்க மாட்டேன். அதேவேளையில் இருக்கிற தாலியை நிச்சயம் காப்பாற்றுவேன்.
திமுக, அதிமுக இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. ஆனால் பாமக ஆட்சிக்கு வந்தால் 50 ஆண்டுகளில் செய்யாததை 5 ஆண்டுகளில் செய்வேன். அந்த 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்கு தேவையான திட்டம் கொண்டுவரப்படும், என்றார்.
முன்னதாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் பொன்.ரமேஷ், மோகன்ராஜ், நல்வினை விஸ்வராஜூ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT