Published : 10 Feb 2016 02:53 PM
Last Updated : 10 Feb 2016 02:53 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை திமுகவினர் முன்னதாகவே தொடங்கி விட்டனர். குறிப்பாக ஆத்தூர், ஒட்டன்சத்திரம் தொகுதிகளில் வெற்றியை தக்க வைக்க திமுகவினர் தற்போதே பிரச்சாரத்தில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஆத்தூர், பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம் ஆகிய ஏழு தொகுதிகள் உள்ளன. இதில் மூன்று தொகுதிகள் அதிமுக வசமும், இரண்டு தொகுதிகள் திமுக வசமும், மார்க்சிஸ்ட், புதிய தமிழகம் வசம் தலா ஒரு தொகுதியும் உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வராதநிலையில், திமுகவினர் முந்திக் கொண்டு பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளனர்.
திமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இ. பெரியசாமியின் தொகுதியான ஆத்தூரில் பூத்கமிட்டிகள் அமைக்கப்பட்டு ஊராட்சிவாரியாக கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதோடு பிற கட்சிகளில் செல்வாக்குள்ள நபர்களை திமுகவில் இணைப்பது, மக்களை நேரடியாக சந்திப்பது என பிரச்சாரம் தற்போதே மும்முரம் அடைந்துள்ளது. மேலும் துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து, அதை மக்களிடம் நேரடியாக திமுக நிர்வாகிகள் விநியோகித்து வருகின்றனர்.
இதில் ஆத்தூர் தொகுதியை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் இ. பெரியசாமி எம்எல்ஏ நேரடியாக பிரசாரம் செய்து வருகிறார்.
ஒட்டன்சத்திரம் எம்எல்ஏவும், திமுக கொறடாவுமான அர. சக்கரபாணி தொகுதி முழுவதும் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளையும் திமுகவினர் மேற்கொண்டுள்ளனர். மற்ற தொகுதிகளில் திமுகவினரின் தேர்தல் பணிகளை காண முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT