Published : 15 Dec 2020 06:43 PM
Last Updated : 15 Dec 2020 06:43 PM

கந்துவட்டிக் கொடுமையைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு: மார்க்சிஸ்ட் கண்டனத் தீர்மானம்

கந்துவட்டியை ஒழிப்பதற்கு அதிமுக அரசுக்கு அக்கறை இல்லை என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழுக் கூட்டம் டிச.15 ,16 ஆகிய தேதிகளில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராஜன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முதல் நாளான இன்று நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

"விழுப்புரம் மாவட்டம், வளவனூரைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி மோகன் மற்றும் அவரது மனைவியைக் கந்துவட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளதால், மோகன் தன் 3 குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, அவரது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது.

தமிழகம் முழுவதும் கந்துவட்டிக் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் தங்கள் தொழில், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்குக் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். வட்டிக்குப் பணம் கொடுக்கும் கந்துவட்டி கும்பல் வட்டிக்கு மேல் வட்டி எனப் பல வகையான வட்டிமுறைகளைக் கையாண்டு அவர்களை அச்சுறுத்தி வருவதும் வாடிக்கையாகிவிட்டது. இக்கொடுமை தாங்காமல் பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே 2017-ம் ஆண்டு திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 4 பேர் தீக்குளித்து இறந்துள்ளனர். இதுபோல, புதுக்கோட்டை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கந்துவட்டிக் கொடுமை தாங்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. சமீபத்தில் கூட தஞ்சாவூர் அருகே வல்லத்தில் வங்கிக் கிளை அலுவலகம் முன்பு இளைஞர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது.

இத்தனை உயிரிழப்புச் சம்பவங்கள் நடந்த பிறகும், இதைத் தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறையும் உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கை கட்டி வேடிக்கை பார்த்து வரும் அக்கறையற்ற போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தச்சுத் தொழிலாளி மோகன் குடும்பத்தினரின் தற்கொலைக்குக் காரணமான கந்துவட்டி கும்பல் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமெனவும், கந்துவட்டி பற்றித் தரப்படும் புகார்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கந்துவட்டி தடுப்புச் சட்டம் (2003)-ஐ தீவிரமாக அமல்படுத்திட வேண்டுமெனவும் தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது".

இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x