Last Updated : 03 Oct, 2020 06:08 PM

 

Published : 03 Oct 2020 06:08 PM
Last Updated : 03 Oct 2020 06:08 PM

2.5 லட்சம் கரோனா நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தியுள்ளனர்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பாக்குடியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளர்களுக்கு இலவச முகக் கவசம் வழங்குகிறார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை

கரோனா காலத்தில் மட்டும் 2.5 லட்சம் கரோனா நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தியுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் இன்று (அக். 3) நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாமைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:

"இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மருத்துவ முகாமில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்குத் தலா 400 பேர் வீதம் மொத்தம் 800 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தில் ஏற்கெனவே 1,000 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரூ.103 கோடியில் கூடுதலாக 500 ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்குத் தமிழக முதல்வர் அண்மையில் உத்தரவிட்டார். அதில், முதல் கட்டமாக 108 எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஓரிரு வாரங்களில் மேலும் 100 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவை தொடங்கப்பட உள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் வீதம் அழைப்புகள் வருகின்றன. இதன் மூலம் தினமும் 4,000 பேர் பயனடைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா காலத்தில் மட்டும் 2.50 லட்சம் கரோனா நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தியுள்ளனர். இதேபோன்று 5.50 லட்சம் பேர் பிற சேவைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தியுள்ளனர்.

கேரளாவில் கரோனா தாக்கத்தினால்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி பரிசோதனை செய்வதற்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எவ்விதப் பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.

இதேபோன்று தன்னார்வலர்களைத் தேர்வு செய்து கரோனா பரிசோதனை செய்வதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை கரோனா பாதித்த 5 லட்சத்து 52 ஆயிரத்து 938 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கரோனா பாதித்து குணமடைந்தவர்களுக்கான பின் கவனிப்பு வார்டுகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

எனவே, கரோனாவால் குணமடைந்தவர்கள் அவசியம் அந்த வார்டுகளுக்குச் சென்று நுரையீரல் செயல்பாடு, மூச்சு விடுதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளைத் தவறாமல் செய்துகொள்ள வேண்டும்".

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இலுப்பூர் அருகே பாக்குடியில் முகக்கவசம் அணியாமல் பணிக்குச் சென்ற தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளர்களுக்கு காரை நிறுத்திவிட்டு இலவச முகக் கவசங்களை வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x