Published : 20 Aug 2020 05:10 PM
Last Updated : 20 Aug 2020 05:10 PM

ஸ்டெர்லைட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு தாக்கல்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய வேதாந்தாவின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தால் தன்னை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

“ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி இல்லை என வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து ஆகஸ்ட் 18-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் என்று கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆரம்பம் முதல் இந்நாள் வரை ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வந்துகொண்டிருக்கிறார்.

இந்த ஆலைக்கு எதிராக சுமார் கால் நூற்றாண்டாக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை வைகோ தலைமை தாங்கி நடத்தி உள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் பசுமைத் தீர்ப்பாயம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களிலும் வைகோவே நேரில் ஆஜராகி வாதிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதால், வைகோ, “தன்னுடைய கருத்தைக் கேட்காமல் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தாக்கல் செய்யும் மேல் முறையீட்டு வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது” என்று உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 ரிட் மனுக்களை தாக்கல் செய்து, அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எல்லா வழக்குகளிலும் வைகோ கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்”.

இவ்வாறு மதிமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x