Published : 20 Aug 2020 02:36 PM
Last Updated : 20 Aug 2020 02:36 PM

மக்களின் உணர்வு, சிலை செய்யும் கைவினைக் கலைஞர்கள் நிலை: விநாயகர் சதுர்த்தி நிபந்தனையில் தளர்வு உண்டா?- உயர் நீதிமன்றம் அரசுக்கு கேள்வி 

சென்னை

மக்களின் உணர்வையும், சிலை செய்யும் கைவினைஞர்களையும் கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி நிபந்தனைகளில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதா? என தமிழக அரசு நாளை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக நாடு முழுதும் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் அமலில் உள்ல நிலையில், பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை கடலில் கரைக்கவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கரோனா தொற்று பரவாமலிருக்கவே இந்த தடை என்றும், பொதுமக்கள் வீட்டிலேயே விநாயகர் சிலையை வைத்து வழிபடவேண்டும் என அரசு அறிவித்துள்ளது. விநாயகர் சிலையை தடையை மீறி பொது இடங்களில் நிறுவுவோம் என இந்து அமைப்புகள் சில அறிவித்துள்ளன.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று, இதுகுறித்த வழக்கில் அரசின் முடிவு சரிதான் என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் தடை உத்தரவை எதிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இல. கணபதி என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது,

அப்போது நீதிபதிகள், “விநாயகர் சதுர்த்தி ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்களின் உணர்வுபூர்வமான விஷயமாக இருக்கிறது. அரசு இந்த விவகாரத்தில் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதா? சிலைகளை செய்யும் கைவினை கலைஞர்களின் நலனையும் கருத்தில் கொள்ளவேண்டும்”. என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணிடம் கேள்வி எழுப்பினார்.

“அதேசமயம் கரோனா தொற்று குறித்து நாங்கள் நன்கு அறிந்து உள்ளோம், பெரிய அளவிலான ஊர்வலங்களை அனுமதிக்க முடியாது என்பதில் நீதிமன்றத்திற்கு மாற்றுக் கருத்தில்லை, 5 அல்லது 6 நபர்களுக்கு மிகாமல் பேரிடர் விதிகளை பின்பற்றி பொதுமக்கள் சிலையை வைத்து வழிபட்ட பின் அதனை பெரிய கோயில்கள் அருகில் கொண்டு வைத்து விடுவது, அல்லது தாங்களே சொந்தமாக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கடற்கரையில் வைத்து விடுவது போன்றவற்றை அனுமதிக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பினர்.

அரசின் விளக்கத்தை பெற்று பதில் தெரிவிப்பதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்த நிலையில் வழக்கு விசாரணையை நாளைக்கு (ஆகஸ்டு 21) ஒத்திவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x