Last Updated : 01 May, 2020 09:13 PM

 

Published : 01 May 2020 09:13 PM
Last Updated : 01 May 2020 09:13 PM

கரோனா; 8 நாட்களுக்குப் பிறகு நாகையில் ஒருவருக்கு பாதிப்பு

கடந்த எட்டு நாட்களாக கரோனா தொற்றாளர்கள் யாரும் கண்டறியப் படாத நிலையில் இன்று ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளது நாகை மாவட்ட மக்களை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

நாகை மாவட்டத்தில் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள், அவர்களைப் சார்ந்தவர்கள் என்று 42 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் இதுவரை 36 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். இவர்களைத் தவிர பாதிப்புக்கு உள்ளான மருத்துவர் உள்ளிட்ட இருவர் சென்னையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இவர்களைத் தவிர கடந்த எட்டு நாட்களாக புதிதாக யாருக்கும் கரீனா பாதிப்பு ஏற்படவில்லை. அதனால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு வந்தது. இந்நிலையில் மீதமுள்ளவர்களும் குணமடைந்து விட்டால் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறிவிடும் என்று மக்கள் மகிழ்ச்சி யுடன் இருந்தனர்.

ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீடிக்க வில்லை. இன்று வெளியான சுகாதாரத் துறை பட்டியலில் நாகையில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.

குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தைச் சேர்ந்த இவர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சென்று திரும்பியவர்.
சீர்காழி மற்றும் குத்தாலம் தாலுகாக்களைச் சேர்ந்த 38 பேர் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி புட்டபர்த்திக்கு சென்றுள்ளனர். அங்கிருக்கும் போதே கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதால் சொந்த ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அரசின் சிறப்பு அனுமதி பெற்று கடந்த 22-ஆம் தேதி பாதிப்பேரும், 25 ஆம் தேதி. மீதி பேரும் ஊர் திரும்பியுள்ளனர்.

அவர்களில் திருவாலங்காட்டை சேர்ந்த இந்த நபர் மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். வெளி மாநிலம் சென்று வந்தவர் என்பதால் அவருக்குப் பரிசோதனை செய்ததில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலும் அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்பிலிருந்த 10 பேர் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
உளுத்துக்குப்பையில் அவர் தங்கியிருந்த பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x