Published : 26 Mar 2020 06:49 AM
Last Updated : 26 Mar 2020 06:49 AM

அவசர சிகிச்சை, காய்ச்சலுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்

வண்டலூர்

அவசர சிகிச்சை, தொடர் காய்ச்சல் இருந்தால் மட்டுமே அரசுமருத்துவமனைக்கு வர வேண்டும்;தேவையில்லாமல் மருத்துவமனையில் கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும்வகையில் மக்களுக்கு பல்வேறுதுறைகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோர் ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கும் வகையில் கோடுகள் போடப்பட்டுள்ளன. அந்த கோடுகளுக்குள் வரிசையில் நின்று பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இதுகுறித்து நந்திவரம் ஆரம்பசுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேஷன்கூறியதாவது:

கரோனா பரவுவதை தடுக்கும் வகையில், அவசர சிகிச்சை, தொடர் காய்ச்சல் மற்றும் தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு வர வேண்டும். மருத்துவமனைக்கு உள்ளே வரும்போதும், வெளியே செல்லும்போதும், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

சிகிச்சைக்காக வருபவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று சிகிச்சை பெறவேண்டும். தேவைப்படும் பட்சத்தில்தான் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். குழந்தைகளை சாலை, தெருக்களில் விளையாடுவதைத் தவிர்க்கவேண்டும். கரோனா வைரஸ் அறிகுறி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைத்து, அங்கு, வென்டிலேட்டர்களுடன் கூடிய படுக்கைகள் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x