Published : 12 Dec 2019 06:32 PM
Last Updated : 12 Dec 2019 06:32 PM

சனிக்கிழமை வேலை நாள்; வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை வரும் சனிக்கிழமை (டிச.14 ) அன்றும் தாக்கல் செய்யலாம் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:

“ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தலுக்கான தேர்தல் அறிவிக்கைகளை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டதைத் தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் டிச.9 முதல் ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

வேட்பு மனுக்களைப் பெறுவதற்கான கடைசி நாள் டிச.16 ஆகும். டிச.14 -ம் தேதி சனிக்கிழமை அன்று பொது விடுமுறை இல்லை என்பதால் அன்றைய நாளில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் வேட்பு மனுக்களைப் பெறுவதற்காக டிசம்பர் 14-ம் தேதி அன்று அவர்களது அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், சனிக்கிழமை அன்று மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்”.

இவ்வாறு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x