Published : 05 Aug 2015 06:04 PM
Last Updated : 05 Aug 2015 06:04 PM

காங். எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: வாசன்

மக்களவையில் 25 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாடாளுமன்றம் மக்கள் மன்றமாக செயல்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இந்தியர்களின் விருப்பமாகும். மக்கள் பிரச்சினைகளை விவாதிக்கவும், வளர்ச்சித் திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கவும் வழி வகுக்கும் இடமாக நாடாளுமன்றம் இருக்க வேண்டும்.

ஆனால், கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முழுமையாக முடங்கியுள்ளது. தங்களது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்காததால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தில் எந்தப் பணியும் நடைபெறவில்லை.

மக்களவையில் 25 காங்கிரஸ் எம்.பி.க்களை இடைநீக்கம் செய்திருப்பது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். பாஜகவுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

கடந்த காலங்களில் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் வந்தபோது முதலில் பதவி விலக வேண்டும். பிறகே விவாதம் என பாஜகவினர் பிடிவாதம் செய்தார்கள். ஆனால், இப்போது முதலில் விவாதம். பிறகே நடவடிக்கை என்கிறார்கள். இது பாஜகவின் இரட்டை நிலையை காட்டுகிறது.

உடனடியாக 25 காங்கிரஸ் எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்'' என வாசன் வலியுறுத்தியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x