Published : 06 Aug 2019 02:41 PM
Last Updated : 06 Aug 2019 02:41 PM

காவிரியாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் 14 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி

தருமபுரி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் வரத்து குறைந்த காரணத்தால் கடந்த 14 நாட்களுக்கு பின் இன்று பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், காவிரியாற்றில்  கடந்த கடந்த ஜுலை மாதம் 23-ம் தேதி பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி அறிவித்தார். அப்போது காவிரியாற்றில் விநாடிக்கு சுமார்  8 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருந்தது.

பின்னர் இந்த நீர்வரத்து படிபடியாக அதிகரித்து வினாடிக்கு சுமார் 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக  பரிசல் இயக்க தொடர்ந்து தடைநீட்டிக்கப்பட்டது.  

இதனிடையே  ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழா 3 நாட்கள் அரசு விழாவாக நடைபெற்றது.  இந்த விழாவைகாண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலப்பயணிகள் ஒகேனக்கலுக்கு வருகைபுரிந்தனர்.  காவிரியாற்றில் மிதமான தண்ணீர் வரத்தை காரணம் காட்டி பரிசல் ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பரிசல் இயக்க கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே தருமபுரி சார் ஆட்சியர் சிவன் அருள், ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர்வரத்து நிலவரம் மற்றும் பாதுகாப்பு குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் கடந்த 14 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல் காவிரியாற்றில் பாதுகாப்பாக பரிசல் இயக்க அனுமதி அளித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவரியாற்க்றில் விநாடிக்கு சுமார் 4500 கனஅடி தண்ணீர் வந்துக்கொண்டுள்ளது. தொடர்ந்து ஒகேனக்கலில் பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

எஸ்.ராஜாசெல்லம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x