Published : 18 Jul 2019 10:38 AM
Last Updated : 18 Jul 2019 10:38 AM

புலியின் உயிரை பறித்த ‘பிளேடு’- அலட்சியத்தால் உயிரிழக்கும் வன விலங்குகள்!

ஆர்.டி.சிவசங்கர்

இந்த பூமி எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது என்பதை மறந்து, சுயநலமாய் செயல்படும் மனிதர்களால் மற்ற உயிரினங்கள் மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகின்றன. மரங்கள் வெட்டப்பட்டு, விலங்குகளும், பறவைகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு வளையத்தில் உள்ள, இந்திய தேசிய விலங்கான புலி ஒரு சிறு பிளேடால் உயிரிழந்த செய்தி, சுற்றுச்சூழல் மீதான நமது அலட்சியத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. 

உலகின் முக்கிய உயிர்ச் சூழல் மண்டலம் நீலகிரி. சூழலியலில் முக்கிய அங்கம் வகிப்பதால் யுனெஸ்கோ அமைப்பு நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலத்தை அங்கீகரித்து,  பாதுகாக்க வலியுறுத்தி உள்ளது. 

இதில்,  3,300 வகை பூக்கும் தாவரங்கள், 100 வகை பாலூட்டிகள், 350 வகை பறவைகள், 80 வகை ஊர்வன இனங்கள், 334 வகை வண்ணத்துப் பூச்சிகள், 39 வகை மீன்கள், 1,232 வகை தாவரங்கள் உள்ளன. இவற்றில் முதன்மையானது நாட்டின் தேசிய விலங்கான வங்கப் புலி.

உலகில் வங்கப் புலிகள் அதிகம் வாழும் பகுதியாக நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் திகழ்கிறது. அழிவின் விளிம்பில் உள்ள புலிகளைப் பாதுகாக்க, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி புலிகள் பாதுகாப்புத் திட்டத்தை 1973-ல் அமல்படுத்தினார். புலிகளையும், அவற்றின் வசிப்பிடங்கள், வாழும் சூழலையும்  பாதுகாக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. 

தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஏறத்தாழ 200 புலிகள் உள்ளன. தமிழகத்தில் முதுமலை, கர்நாடகாவில் பந்திப்பூர், கேரளாவில் முத்தங்கா வனப்பகுதிதான் புலிகளின் முக்கிய வசிப்பிடங்கள். இதனால், இம்மூன்று வனப் பகுதிகளும் தேசிய புலிகள் ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு,  2007-ல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டன. 

முதுமலையில்தான் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான புலிகள் வசிக்கின்றன. 321 சதுர கிலோமீட்டர் பரப்பில் சுமார் 125 புலிகள் உள்ளன. அதாவது,  7 சதுர கிலோமீட்டர் பகுதிக்கு ஒரு புலி என்ற விகிதத்தில் புலிகள் வசிக்கின்றன. 

புலிகளுக்கு ஆபத்து!

வேட்டை, விஷம் வைப்பது  போன்ற காரணங்களால் அழிவின் விளிம்புக்குச் சென்ற புலிகள் இனம், கடந்த சில ஆண்டுகளாக மெல்ல மீண்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை மட்டுமின்றி, பந்தலூர், கூடலூர், முக்கூர்த்தி, நடுவட்டம் பகுதிகளிலும் புலிகள் காணப்படுகின்றன. நீலகிரியில் `ஆட்கொல்லி’  என்ற பெயரில், கடந்த 5 ஆண்டுகளில் 3 புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டன.  மேலும், கீழ்கோத்தகிரி, நடுவட்டம் பகுதிகளில் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
இந்நிலையில், உதகை அருகே பார்சன்ஸ்வேலி அணையை ஒட்டிய பகுதியில் நேற்று முன்தினம் ஒரு புலி இறந்து கிடப்பதை, ரோந்து சென்ற வன ஊழியர்கள் பார்த்து, உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். வனத் துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்த்தபோது, சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் புலி இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர், கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.

புலியின் வயிற்றில் பிளேடு துண்டுகள்!

அப்போது, அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், புலியின் வயிற்றில் ஒரு செ.மீ.  அளவுள்ள, கூர்மையான பிளேடு துண்டுகள் இருந்தன. வயது முதிர்வு அல்லது இறைச்சியில் விஷம் வைத்து இந்தப் புலி கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதியிருந்த வனத் துறையினருக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் குருசாமி கூறும்போது, :”பார்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் இறந்து கிடந்த ஆண் புலி,  நஞ்சநாடு மற்றும் சுற்றுவட்டார வனப் பகுதிகளில் நடமாடியுள்ளது. பிரேதப் பரிசோதனையின்போது, புலியின் வயிற்றில் பிளேடும்,  நாடாப் புழுவும் இருந்தன. வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி சாப்பிட்டால் மட்டுமே, நாடாப் புழு உருவாகும். இருப்பினும்,  பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே முழு விவரமும் தெரியவரும்” என்றார்.

சுற்றுச்சூழல் மீதான அலட்சியம்!

தேசிய விலங்கான புலியைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நமது அலட்சியத்தால் அவற்றை மெல்ல இழந்து வருகிறோம் என்கின்றனர் சூழலியலாளர்கள்.

“உதகை அருகே பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளிலே,  பார்சன்ஸ்வேலி பகுதிக்கு அருகில் நஞ்சநாடு, தீட்டுக்கல் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன. தீட்டுக்கல் பகுதியில் உள்ள நகராட்சி குப்பை தளத்தில் உணவுக் கழிவுகளை உண்பதற்காகக் கடமான்கள், பன்றிகள் தொடர்ச்சியாக வருகின்றன. பார்சன்ஸ்வேலியில் இறந்த புலியின் உடலில் கடமான் இறைச்சியுடன், பிளேடு துண்டு இருந்துள்ளது. எனவே, புற்களுடன் சேர்த்து பிளேடையும் மான் விழுங்கியிருக்கலாம். அந்த மான் புலிக்கு இறையாகி,புலியின் வயிற்றில் பிளேடு துண்டு சென்று,  குடல் அறுபட்டு புலி இறந்திருக்க வாய்ப்புள்ளது.

புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டிருந்தாலும், அவற்றை வனங்களில் காண வேண்டுமென்ற ஆவலும் மனிதர்கள் மத்தியில் உள்ளது. இதனால், மனிதர்கள் வனங்களை நோக்கிச் செல்கின்றனர். அவர்களை வனத் துறையும் ஆதரிக்கிறது. ‘ஈக்கோ டூரிஸம், ஜங்கிள் சஃபாரி’ என்ற பெயர்களில், வனத்தில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று புலிகளைக் காண்பித்து, அவற்றை காட்சிப்பொருளாக மாற்றி வருகின்றனர். மனிதர்களிடையே சுற்றுச்சூழல் மீது அலட்சியமே மேலோங்கி வருகிறது என்பதையே இது காட்டுகிறது” என்றனர். ‘ஒரு புலி இறந்தது மட்டுமே தற்போது வெளியே தெரிந்துள்ளது. அதேசமயம், இதுபோல எத்தனை உயிரினங்கள், மனிதர்களின் அலட்சியத்தால் இறந்திருக்குமோ?’ என்ற கவலையும் இயற்கை, சூழல் ஆர்வலர்களிடையே எழாமல் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x