Published : 02 Mar 2015 10:55 AM
Last Updated : 02 Mar 2015 10:55 AM
அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மார்ச் 7-ம் தேதி கட்சியின் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை எழுச்சி தினப் பேரணி நடைபெற உள்ளது. இது குறித்து கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுகவுக்கு புத்துணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்சியின் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை ஆகியவை கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான இளைஞர்களும், இளம் பெண்களும் சேர்ந்து கட்சிப் பணியாற்றி வருகின்றனர்.
தொடர்ந்து அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை தோற்றுவிக்கப்பட்ட தினத்தை நினைவு கூறும் வகையில், கட்சி ரீதியில் செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மார்ச் 7-ம் தேதி இளைஞர் பாசறை எழுச்சி தினப் பேரணி நடைபெறும். இதில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT