Published : 13 Feb 2015 11:04 AM
Last Updated : 13 Feb 2015 11:04 AM

செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 258 பேர் மீட்பு

திருவள்ளூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த 258 பேர், தங்கள் குழந்தைகள் 75 பேருடன் மீட்கப்பட்டனர்.

திருவள்ளூர் அருகே உள்ள வெங்கலை அடுத்த புதுகுப்பத்தில் செயல்பட்டு வருகிறது தனியார் செங்கல் சூளை. முனுசாமி என்பவருக்கு சொந்தமான இந்த செங்கல் சூளையில் ஒடிசாவைச் சேர்ந்த பலர் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக, வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த ரகசிய தகவலையடுத்து, திருவள்ளூர் சார் ஆட்சியர் ராகுல்நாத், வட்டாட்சியர் கணபதி சிங் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட செங்கல் சூளையில் நேற்று முன் தினம் இரவு ஆய்வு நடத்தினர்.

அந்த ஆய்வில், செங்கல் சூளையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 105 குடும்பங்களைச் சேர்ந்த 258 பேர், தங்கள் குழந்தைகள் 75 பேருடன் கடந்த 3 மாதங்களாக தங்கி, கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கொத்தடிமைகளாக பணிபுரிந்த 258 பேர் மற்றும் அவர்கள் குழந்தைகள் உட்பட 333 பேரை, செங்கல் சூளையில் இருந்து மீட்டு, தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்நிலையில், நேற்று காலை, மீட்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தமிழக அரசின் சார்பில் நிதி உதவி வழங்கினார். அதன் பிறகு, மீட்கப்பட்ட 333 பேரில், 104 பேர் நேற்று, அவர்களின் சொந்த மாநிலமான ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மற்றவர்கள் நாளை (14-ம் தேதி) ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த வெங்கல் போலீஸார், தலைமறைவாக உள்ள செங்கல் சூளையின் உரிமையாளரான முனுசாமியைத் தேடி வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x