Published : 27 Feb 2015 10:21 AM
Last Updated : 27 Feb 2015 10:21 AM

டிஜிட்டல் பேனர் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

டிஜிட்டல் பேனர் வைப்பதற்கான ஒழுங்குமுறை விதிகள் அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக நீதிமன்றம் அமைத்த குழு செயல்படுவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை 2 வாரத் துக்குள் செய்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாமல் சாலையோரங்கள், நடை பாதைகளில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே, இத்தகைய டிஜிட்டல் பேனர்கள் வைப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இவ்வழக்கை விசாரித்து, டிஜிட்டல் பேனர் வைப்பதற்கான ஒழுங்குமுறை விதிகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் குழு அமைத்து கடந்தாண்டு டிசம்பரில் உத்தரவிட்டது. அதன்பிறகும் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதில் விதிமீறல்கள் நடப்பதாக உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு உயர்நீதிமன்ற முதல் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் “நீதிமன்றம் அமைத்த குழுவுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல், இப்போது அதற்காக மேலும் 2 வாரம் காலஅவகாசம் வேண்டும் என்று கேட்பதை ஏற்க முடியாது. இது, கேலிக்கூத்தாக இருக்கிறது. இந்த குழு செயல்படுவதற்கான அடிப்படை வசதிகளை 2 வாரத்துக்குள் செய்து தரா விட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரி கள் மார்ச் 30-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்” என்று எச்சரித்து வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x