Published : 16 Feb 2015 09:58 AM
Last Updated : 16 Feb 2015 09:58 AM

கடல் அலையில் சிக்கி 15 நாளில் 8 பேர் பலி; 14 பேர் மீட்பு: அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்தவை

சென்னை கடலில் மூழ்கி கடந்த 15 நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடந்துள்ளன.

சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையை சேர்ந்தவர் நரேந்திரன். இவரது மகன் நிராஜ் (15). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் ஹரிஷ், ஆரிஷ் ஆகியோருடன் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்றார். 3 பேரும் தண்ணீரில் விளையாடியபோது அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அருகே இருந்த மீனவர்கள் இதைப் பார்த்து கடலுக்குள் நீந்திச் சென்று 3 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அப்போது நிராஜ் மயங்கிய நிலையில் இருக்கவே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நிராஜ் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனைவரும் மாணவர்கள்

பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று எண்ணூர் கடலில் சிலம்பரசன் என்ற 5-ம் வகுப்பு மாணவனும், 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெசன்ட் நகர் கடலில் நாவலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சூர்யா, சுசீந்திரன், பிரதீப் ஆகிய 3 பேரும், மெரினா கடலில் கார்த்திக் என்ற கல்லூரி மாணவரும், நேற்று நிராஜ் என்ற மாணவரும் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே அடையாளம் தெரியாத 2 பேரும் கடலில் விழுந்து இறந்தனர். கடந்த 15 நாளில் கடலில் விழுந்து தத்தளித்த 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கடல் விளையாடுமிடமில்லை

சென்னையில் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் இருந்தாலும் கடற்கரைக்கு சென்று வருவது என்பது அனைவருக்கும் பிடித்தமானதுதான். தள்ளி இருந்து பார்ப்பதற்கு கடல் அழகுதான். உள்ளே சென்றால் உயிர் பலி நிச்சயம். இதை அறியாமல் கடலில் விளையாடுகின்றனர்.

கடற்கரைகள் சாய்வாக இருப்பதால் தண்ணீரில் நீண்ட தூரம் சென்றால்தான் ஆழம் அதிகரிக்கும் என்று கருதுவது தவறு. ஓரிரு மீட்டர்கள் மட்டுமே சாய்வாக செல்லும் தரை, அடுத்த சில மீட்டரில் 100 அடிக்கும் அதிக ஆழமான பகுதியாக இருக்கும். பலர் இதை அறியாமல் கடலுக்குள் இறங்கி உயிரை விடுகின்றனர்.

ஆறு, குளங்கள் போல கடலில் நீச்சல் அடிக்க முடியாது. அலையின் போக்கிற்கு ஏற்றார்போல செயல்படாவிட்டால், அது நிச்சயம் நமது உயிரை குடித்துவிடும். கடல் குறித்த எந்த அறிவும் இல்லாமல் அதனுடன் விளையாடுவது அபாயமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x