Published : 31 Aug 2017 09:30 PM
Last Updated : 31 Aug 2017 09:30 PM

விஜய் சேதுபதி நடிப்பில் வெள்ளியன்று வெளியாக இருந்த புரியாத புதிர் படத்துக்கு இடைக்கால தடை

நடிகர் விஜய் சேதுபதி நடித்து நாளை (வெள்ளிக்கிழமை அன்று) வெளியாக இருந்த புரியாத புதிர் படத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு (பெப்சி) பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம் சென்னை முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நடிகர் விஜய்சேதுபதி, நடிகை காயத்ரி ஆகியோர் நடித்துள்ள 'புரியாத புதிர்' படம் நாளை வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை தயாரிக்கும்போது ஒப்பனைக் கலைஞர்கள், ஓட்டுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதன்படி தென்னிந்திய சினிமா மற்றும் டிவி சண்டை கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.2.17 லட்சம், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு மேலாளர்கள் சங்கத்துக்கு ரூ.1.67 லட்சம், கலை இயக்குநர்கள் சங்கத்துக்கு ரூ. 4.28 லட்சம் உள்பட பல சங்கங்களுக்கு ரூ. 22 லட்சத்து 13 ஆயிரத்து 51 இன்னும் வழங்கப்படவில்லை.

ஆனால் 'புரியாத புதிர்' படத்தை தயாரித்துள்ள ஜெஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் உரிமையாளர் ஜெ.சதீஷ்குமார் படத்தை திரையிடுவதற்கு முன்பாக சம்பள நிலுவைத் தொகை அனைத்தையும் தருவதாக உறுதியளித்து இருந்தார். ஆனால் கூறியபடி இந்த தொகையை வழங்காமல் செப்டம்பர் 1-ம் தேதி இந்தப் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த தொகையை தராமல் இப்படம் வெளியிடப்பட்டால் ஏழைத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்'' என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று 2-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி சி.கார்த்திகா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் இரா.சிவசங்கர் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ''தொழிலாளர்கள் அனைவரும் ஏழைகள். அவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை வழங்காமல் படத்தை திரையிடக் கூடாது. ஆனால் அந்த நிலுவைத் தொகைக்காக எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் இல்லை. ஆனாலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைக் கருத்தில் கொண்டு இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க முகாந்திரம் உள்ளது. அதன்படி 'புரியாத புதிர்' படத்தை வரும் செப்டம்பர் 14-ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது'' என உத்தரவி்ட்டு, இதுதொடர்பாக எதிர்மனுதாரர்கள் பதிலளிக்கவும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x