Published : 14 Apr 2017 07:12 PM
Last Updated : 14 Apr 2017 07:12 PM
அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின்போது, அதிகாரிகளுக்கு இடையூறு செய்ததாக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகிய 4 பேர் மீதும் 4 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்ட தாக எழுந்த புகாரை தொடர்ந்து அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் கடந்த 7ம் தேதி வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் 55 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
அமைச்சர் விஜய பாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்தபோது அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆர்.ஏ.புரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையினருடன் 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடையை மீறி உள்ளே புகுந்ததாகவும் சோதனையில் ஈடுபட்டிருந்த வருமான வரி புலனாய்வு அதிகாரி மற்றும் பெண் அதிகாரி ஒருவரை மிரட்டியதாகவும் தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து சென்னை வருமான வரி துறையின் புலனாய்வு பிரிவு இயக்குனர் முரளி, சென்னை மாநகர காவல் ஆணையர் கரன் சின்காவுக்கு கடிதம் மூலமாக புகார் மனு அனுப்பினார். அதில், “அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தியபோது, தமிழக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசி பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
அதிகாரிக்கு மிரட்டல்
தளவாய் சுந்தரம் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பெண் அதிகாரி ஒருவரை கடுமையாக மிரட்டியுள்ளனர். எனவே 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சரத்குமார் வீட்டில் சோதனை நடந்தபோது, அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமைச் சர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் போலீஸ் அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதா கிருஷ்ணன், கடம்பூர் ராஜூ மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது அபிராமபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
4 பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 183, மற்றும் 186 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 189 (அரசு ஊழியரை அச்சுறுத்துதல்), 448 (வீட்டினுள் அத்துமீறி நுழைதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து குற்ற தொடர்வுத் துறை மாநில இயக்குநர் எஸ்.சண்முகத்திடம் கேட்டபோது, கருத்து கூற மறுத்து விட்டார்.
அமைச்சர் பதவி பறிப்பா?
அமைச்சர் ஒருவர் மீது காவல்துறை கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனில், முதலில் முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும். முதல்வர், ஆளுநருக்கு தகவல் தெரிவித்து தன் அமைச்சரவையில் இருந்து அந்த அமைச்சரை விடுவிப்பார்.
அதன்பின், அந்த அமைச்சர் எம்எல்ஏ என்ற தகுதியில் மட்டுமே இருப்பார். தொடர்ந்து, எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டு தொடர்பான தகவல் பேரவைத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும். அதன் அடிப்படையில் பேரவைத் தலைவர், மற்ற எம்எல்ஏக் களுக்கு தகவல் தெரிவிப்பார். அதன்பின், எம்எல்ஏ மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கும்.
இதனிடையே, நேற்று செய்தி யாளர்களிடம் பேசிய அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ‘‘அமைச்சரவையில் எந்த மாற்றமும் இருக்காது’’ என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT