Published : 26 Jun 2017 09:41 AM
Last Updated : 26 Jun 2017 09:41 AM
குடியரசு தலைவர் தேர்தலுக்குப் பிறகு நிச்சயமாக தமிழக சட்டப் பேரவை தேர்தல் வரும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக சார்பில் தமிழகம் முழுவதும் குளம், குட்டைகளை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதன்ஒரு பகுதியாக திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோயில் குளம், திருத்தணி சதாலிங்கேஸ்வரர் கோயில் குளம், பொதட்டூர்பேட்டை தாமரைகுளம் ஆகிய குளங்கள் தூர்வாரும் பணியை திமுகவினர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப் பணிகளை நேற்று திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது: அரசு சார்பில் பெரும்பாலான நீர் நிலை கள் தூர்வாரப்படவில்லை. ஆனால், எதிர்க்கட்சியாக இருந் தாலும் திமுக, விவசாயிகளின் வாழ் வாதாரத்தை காக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 234 தொகுதி களிலும் குளங்களை தூர்வார திட்ட மிட்டுள்ளது. தற்போது, 125 தொகுதிகளில் குளங்கள் தூர் வாரும் பணி நடந்து வருகிறது. இதில், 50 சதவீத பணிகள் முடிந்துள் ளன. இதேபோல் முதல்வர் எடப் பாடி பழனிசாமி தொகுதியிலும் பணிகள் நடந்து வருகின்றன.
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர், சர்வாதிகார அடிப் படையில் செயல்பட்டு வருகிறார். அதனையும் மீறி, மக்கள் பிரச்சி னைகளுக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. எம்எல்ஏக்கள் குதிரை பேரம் குறித்து திமுக சார்பில் ஆளுநரிடம் முறையிட்டோம். இதுகுறித்து சபாநாயகர் விசாரணை நடத்த வேண்டும் என்ற ஆளுநர் உத்தர வையும் சபாநாயகர் செயல் படுத்தாமல் உள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஆர்கே நகர் இடைத்தேர்தல் முறைகேடு தொடர்பாக முதல்வர் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, தேர்தல் ஆணையமே தாக்கீது அனுப்பி 2 மாதங்கள் முடிந்து விட்டது. ஆனால், வழக்குப் பதிவு செய்ய தலைமை செயலாளர் மற்றும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
குடியரசு தலைவர் தேர் தலுக்கு பிறகு, நிச்சயமாக தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரத்தான் போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. காரணம், நீட் தேர்வு உள்ளிட்டவை குறித்து, அதிமுக அரசு கொஞ்சமும் கவலைப் படவில்லை. அவர்களுடைய கவலை எல்லாம், ஆட்சியை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்பதில் தான் உள்ளது. அதிமுக பல அணிகளாக பிரிந்து இருந்தாலும், ஆட்சியை தக்க வைத்து, எப்படி கொள்ளையடிக்க வேண்டும் என்பதில் அனைவரும் கூட்டாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதில், திமுக திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணு, திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன், முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT