Published : 05 Jul 2016 08:13 AM
Last Updated : 05 Jul 2016 08:13 AM
திருப்பூர் அருகே ரூ.570 கோடி பிடிபட்டதன் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளும் சிபிஐ விசாரணையில் வெளிவரும் என திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’ வுக்கு அவர் நேற்று அளித்த சிறப்பு பேட்டி:
தேர்தலின்போது கன்டெய்னர் களில் ரூ.570 கோடி பிடிப்பட்டது தொடர்பாக நீங்கள் தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக நீங்கள் வழக்கு தொடர என்ன காரணம்?
சட்டப்பேரவைத் தேர்தலின் போது இதுவரை இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான கோடி அளவுக்கு தேர்தல் பறக்கும் படையினரால் பணம் கைப்பற்றப்பட்டது. வாக்காளர் களுக்கு ஆளுங்கட்சியினர் பணம் கொடுப்பது வெட்ட வெளிச்சமாக நடந்து கொண்டிருந்தது.
இந்தச் சூழலில்தான் வாக்குப் பதிவுக்கு 3 நாட்களுக்கு முன்பாக 3 கன் டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது எங்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரினோம். அதை தமிழக அரசு ஏற்காததால் வழக்கு தொடர்ந்தோம்.
ரூ.570 கோடியும் எங்களுடையது என பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உரிமை கோரியுள்ளதே?
இது உண்மையெனில் கன்டெய்னர் லாரிகளை தேர்தல் பறக்கும் படையினர் சுற்றி வளைத்ததும் அதில் இருந்தவர்கள் தப்பியோடியது ஏன்? உரிய ஆவணங்கள் இல்லாமல், எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் மிகப்பெரிய தொகையை கொண்டு சென்றது ஏன்? 18 மணி நேரத்துக்குப் பிறகே பணத்துக்கு எஸ்பிஐ உரிமை கோரியது. இந்த தாமதத்துக்கு என்ன காரணம்?
எஸ்பிஐ ஏடிஎம்களில்கூட கண்காணிப்பு கேமரா உள் ளது. ஆனால், ரூ.570 கோடியை கன்டெய்னரில் ஏற் றும்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியிடப்படவில்லை. இதுபோன்ற சந்தேகங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. சிபிஐ விசாரணையில் இந்த உண்மைகள் வெளிவரும் என நம்புகிறோம்.
மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கும் இடையேயான மோதலுக்கு ரூ.570 கோடி விவகாரமே காரணம் என பேசப்படுகிறது. எனவே, அவரையும் விசாரிக்க வேண்டும் என கோருவீர்களா?
மத்திய அரசு - ரகுராம் ராஜன் மோதலுக்கும் ரூ.570 கோடி விவகாரத்துக்கும் தொடர்பு இருப்பதாக நான் கருதவில்லை. ரூ.570 கோடி பணத்தின் பின்னணியில் பல மர்மங்கள் புதைந்துள்ளன. அதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர்ந்தோம். ரிசர்வ் வங்கி, எஸ்பிஐ உள்ளிட்ட எந்தவொரு அமைப்பையோ, தனிநபரையோ குறிவைத்து நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை. சிபிஐ விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என நம்புகிறோம்.
இவ்வாறு டி.கே.எஸ்.இளங் கோவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT