Published : 05 Jan 2016 07:47 AM
Last Updated : 05 Jan 2016 07:47 AM

திமுக கூட்டணிதான் பொருத்தமானது: காங். மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதுதான் பொருத்தமானது என தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

காங்கிரஸ் மாவட்டத் தலை வர்கள் கூட்டம், கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடை பெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத் தில் தேசிய செயலாளர் சு.திருநாவுக் கரசர், தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு, மாநிலப் பொருளாளர் நாசே ராமச்சந்திரன் உள்ளிட்ட தேசிய, மாநில நிர்வாகிகள், 51 மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர்.

புறக்கணிப்பு

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் இந்தக் கூட்டத் தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என 61 மாவட்டத் தலைவர்களுக்கும் கடிதம் அனுப் பப்பட்டிருந்தது. ஆனால், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், தங்க பாலு ஆதரவு மாவட்டத் தலை வர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

இது தொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, ‘‘61 மாவட்டத் தலைவர்களில் 51 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர். 4 பேர் தாங்கள் கலந்துகொள்ள முடியாததற்கான காரணத்தை விளக்கி மாநிலத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். 6 பேர் மட்டும் வரவில்லை. அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை’’ என்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டத் தலைவர் ஒருவர் கூறியதாவது:

வாக்குச்சாவடி முகவர்களை நியமித்துள்ள மாவட்டத் தலை வர்கள், அதற்கான படிவங்களை மாநிலத் தலைவரிடம் அளித்துள் ளனர். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை தோற்கடிக்கும் வகையில் மதச்சார்பற்ற கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், அதற்கு திமுகவுடன் கூட்டணி வைப்பதே பொருத்தமானதாக இருக்கும் என பெரும்பாலான மாவட்டத் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஒருசில மாவட்டத் தலைவர்கள், திமுகவுடன் கூட்டணி வைத்தால் கவுரமான தொகுதிகளைப் பெற வேண்டும். எந்தக் கூட்டணியாக இருந்தாலும் 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் வகையில் அமைய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சியை பலவீனப்படுத்தும் வகை யில் செயல்படுவர்கள் மூத்த தலைவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்தனர். இறுதியாக பேசிய இளங்கோவன், ‘‘காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பும் கூட்டணி கண்டிப்பாக அமையும். ஆனாலும், தனித்துப் போட்டியிடவும் தயாராக இருக்க வேண்டும்’’ என்றார்.

இவ்வாறு அந்த மாவட்டத் தலைவர் கூறினார்.

தீர்மானங்கள்

அதிமுக, பாஜகவை தோற் கடிக்கும் வகையில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈடுபட வேண்டும், பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

சிதம்பரம் மீது இளங்கோவன் புகார்

‘தமிழக காங்கிரஸ் தலைவரான இளங்கோவன், கட்சியினர் அனைவருக்கும் பொதுவானவராக இல்லாமல் தனி அணி அமைத்துக்கொண்டு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். எனவே, மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை’ என ப.சிதம்பரம் ஆதரவு மாவட்டத் தலைவர்களான கராத்தே தியாகராஜன், த.புஷ்பராஜ், சத்தியமூர்த்தி, மாநில நிர்வாகிகள் கே.எஸ்.அழகிரி, வள்ளல்பெருமான் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து இளங்கோவனிடம் கேட்டபோது, ‘‘இந்த அறிக்கையின் பின்னணியில் ப.சிதம்பரம் இருக்கிறார். அவர்களுக்கு விரைவில் பதிலளிப்பேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x