Published : 09 Oct 2013 05:59 PM
Last Updated : 09 Oct 2013 05:59 PM

எம்.எல்.ஏ. அலுவலகத்தை அலங்கரிக்கும் நூலகம்

தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களையும் மக்கள் எளிதில் சந்தித்து முறையிட்டு தங்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வசதியாக ஒவ்வொருவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் அரசு மூலமாக கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் முழுமையாகப் பயன்ப்படுத்தி கொள்கிறார்களா என்றால், இல்லை என்ற பதில்தான் மக்களிடம் ஓங்கி எதிரொலிக்கிறது.

ஆனால் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மட்டும் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்துள்ளது. மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களின் அறிவை வளர்க்கக்கூடிய களஞ்சியமாக அந்த அலுவலகம் திகழ்கிறது. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் ஒரு அறையைப் பொது நூலகமாக மாற்றியிருக்கிறார் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. எ.வ.வேலு. தனக்குப் பரிசாக வந்த நூல்களையும், தன் நண்பர்கள் மூலமாக கிடைத்த நூல்களையும், சென்னை போன்ற மாநகரங்களுக்கு சென்றபோது வாங்கிய நூல்களையும் கொண்டு எம்.எல்.ஏ. அலுவலகத்தை நூலகமாக அலங்கரித்துள்ளார். இது 2 ஆண்டுகளாக வெற்றி நடைபோடுகிறது.

அகநானூறு, புறநானூறு, பத்துப்பாட்டு, தொல்காப்பியம், சிந்துவெளி நாகரிகம், ஐம்பெரும் காப்பியங்கள், கம்பராமாயணம், மகாபாரதம் என்று தமிழ் இலக்கிய நூல்களும், தமிழர் காவல் தெய்வங்கள், பாறை ஓவியங்கள், திராவிட மக்களின் சிந்துவெளி எழுத்துகள் போன்ற தமிழ் ஆய்வு நூல்களும், சுயமரியாதை திருமணம், புலியாட்டம், திருஅண்ணாமலை சித்தர்கள், கீதை சொல்லும் பாதை என்ற பண்பாட்டு நூல்களும், மதராசபட்டினம், மொழிப்போர் வரலாறு, சுதந்திர போராட்டத் தலைவர்கள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் உருவான வரலாற்று நூல்களும் இடம்பெற்றுள்ளன.

நோபல் வெற்றியாளர்கள் மற்றும் பல்வேறு அறிஞர்கள் படைப்புகளின் அறிவியல் நூல்களும், சீவகசிந்தாமணி, பார்த்திபன் கனவு, பொன்னியின்செல்வன் போன்ற கதைகளின் நூல்களும், இராவண காவியம், மானுடம் போற்று, குடும்ப விளக்கு போன்ற கவிதை நூல்கள் மட்டுமின்றி பெரியார், அண்ணா, கருணாநிதி சுயசரிதை மற்றும் கொள்கை விளக்க நூல்களும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் மற்றும் ஆங்கில அகராதி களும், பொது அறிவு, சைக்காலஜி என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன. தினசரி நாளிதழ்களும் உள்ளன. இந்த நூலகத்தை பள்ளி - கல்லூரி மாணவர்கள், தமிழ்மொழி ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டுள்ளவர்களும் அதிக அளவில் பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர். பாமர மக்களும் இலக்கியவாதிகளும் வந்து செல்ல தவறுவதில்லை. ஒரு நாளைக்கு 15 முதல் 20 பேர் வரை பயன்படுத்தி கொள்கின்றனர்.

இதுமட்டுமின்றி, நூல்களில் இருந்து தேவைப்படும் குறிப்புகள் இலவசமாக ஜெராக்ஸ் போட்டு கொடுக்கப்படுகிறது. அரசு வழங்கும் சலுகைகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதனால், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்பெறுகின்றனர். பேருந்து நிலையம் அருகே இருப்பதால் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x