Published : 07 Jul 2016 11:44 AM
Last Updated : 07 Jul 2016 11:44 AM
கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மோதி காயமடைந்த காட்டு யானை முதுமலையில் உள்ள தெப்பக்காடு முகாமில் நேற்று உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கிருஷ்ணகிரி - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4-ம் தேதி காலை 2 யானை கள் சாலையைக் கடக்க முயன்றன. அப்போது அந்த வழியாக வந்த அரசு விரைவுப் பேருந்து மோதி, 10 வயது மதிக்கத்தக்க மக்னா யானை பின்னங்காலில் பலத்த காயமடைந்து கீழே விழுந்தது. அங்கு வந்த வனத்துறையினர் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, லாரியில் ஏற்றி மேல் சிகிச்சைக்காக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர்.
நேற்று மதியம் யானை திடீரென உயிரிழந்தது. மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர்.
முதுமலை புலிகள் காப்பக இயக்குநர் சீனிவாஸ் ஆர்.ரெட்டி கூறும்போது, “யானையின் வலது பின்னங்காலிலும், இடுப்புப் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டதால், எலும்பு முறிவும், உள் உறுப்புகளிலும் பாதிப்பும் ஏற்பட்டு இருந்தது. மேலும் தீவனம் உட்கொள்ள முடியாமல் இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT