Published : 17 Jun 2016 09:26 AM
Last Updated : 17 Jun 2016 09:26 AM

நெல்லையில் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அதிமுகவினர் திரண்டதால் போக்குவரத்து நெரிசல்

திருநெல்வேலியில் பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அதிமுகவினர் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.

வழக்கமாக அண்ணா, எம்.ஜி.ஆர்., பெரியார் பிறந்த நாள், நினைவு நாள் போன்ற முக்கிய தினங்களில் அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவிக்க அரசியல் கட்சியினர் திரள்வர். இதனால் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து பாளையங்கோட்டைக்கு வரும் பிரதான சாலையில் போக்குவரத்து முடங்கும். முக்கியமாக திருநெல் வேலி ஆற்றுப்பாலம், ஈரடுக்கு மேம்பாலம், அண்ணா சிலை சந்திப்பு, செல்லபாண்டியன் சிலை சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து செல்ல நேரிடும்.

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தபின் திருநெல்வேலி யில் அதிமுக நிர்வாகிகள் சிலர் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மாநில மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்தியானந்த் எம்.பி., அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் பாப்புலர் வி. முத்தையா ஆகியோர், சந்திப்பில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

கொக்கிரகுளத்திலுள்ள எம்.ஜி.ஆர். சிலை, சந்திப்பிலுள்ள அண்ணா சிலை, பாளையங்கோட்டை பெரியார் சிலை ஆகியவற்றுக்கு அவர்கள் மாலை அணிவித்தனர். அவர்களுடன் கட்சியின் பல்வேறு பிரிவுகளில் உள்ள நிர்வாகிகள் கார்களில் அணிவகுத்தனர். இதனால் திருநெல்வேலி சந்திப்பு முதல் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வரையிலான சாலையில், காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

சிலைகள் அமைந்துள்ள இடங்க ளில் சாலைகளை ஆக்கிரமித்து அதிமுக நிர்வாகிகளின் வாகனங்கள் நிறுத்தியதால், அப்பகுதியைல் கடக்க வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். போக்குவரத்து போலீஸாரால் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியவில்லை. அதிமுக நிர்வாகிகளின் செயல்களை தடுக்கவும் அவர்கள் முன்வரவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதியுற நேர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x