Last Updated : 25 Jun, 2019 11:57 AM

 

Published : 25 Jun 2019 11:57 AM
Last Updated : 25 Jun 2019 11:57 AM

சந்தேகத்தால் நடந்த விபரீதம்; சங்கரன்கோவிலில் மனைவியைக் கொலை செய்த கணவர் கைது

சங்கரன்கோவிலில் மனைவியைக் கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் காமராஜர் புது கீழ 1-வது  தெருவைச் சேர்ந்தவர் கோமதிநாயகம் (35), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி (33). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த 20-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த முத்துமாரி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் டவுன் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் சென்று மீண்டும் கோமதிநாயகம் வீட்டுக்கே வந்து விட்டது.

முத்துமாரி அணிந்திருந்த நகைகள் எதுவும் திருடு போகவில்லை என்பது தெரியவந்தது. இந்தக் கொலை தொடர்பாக சங்கரன்கோவில் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வீட்டில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியதில் சந்தேகப்படும்படியான கைரேகை பதிவுகள் எதுவும் இல்லை.

இதனால் கோமதிநாயகம் மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது மனைவியை தானே கொலை செய்ததாக கோமதிநாயகம் ஒப்புக் கொண்டார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கடந்த 20-ம் தேதியும் தகராறு ஏற்பட்டதால் அவரை வெட்டிக் கொன்று விட்டு வேலைக்குச் சென்று விட்டதாகவும் பின்னர் எதுவுமே தெரியாதது போல் நடந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து கோமதிநாயகத்தை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x