Published : 29 Dec 2018 01:35 PM
Last Updated : 29 Dec 2018 01:35 PM
எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சே.கீதாலட்சுமி டிசம்பர் 28-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதனையடுத்து இன்று (29.12.18) புதிய துணை வேந்தராக மருத்துவர் சுதா சேஷையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சுதா சேஷையனிடம் அளித்தார். அப்போது ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலர் ராஜகோபால் உடனிருந்தார்.
முன்னதாக துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடுகள் நடப்பதாகச் சர்ச்சைகள் கிளம்பின. இந்நிலையில் நியமனத்தில் தமிழக அரசு சில மாற்றங்களை செய்து, அரசாணை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்படுபவர் மருத்துவக் கல்வியில் பட்ட மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தது 20 ஆண்டுகள் மருத்துவராக தொழில் செய்திருக்க வேண்டும். 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 5 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்திருக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி டீன், மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் போன்ற நிர்வாகத் துறையில் 6 ஆண்டுகளாவது பணியாற்றி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது புதிய துணை வேந்தராக மருத்துவர் சுதா சேஷையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த சுதா சேஷையன்?
சென்னை மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் துறைத் தலைவரான சுதா சேஷையன், எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கணீர் குரலுக்குச் சொந்தக்காரரான சுதா சேஷையன், அரசு பதவியேற்பு உட்பட ஏராளமான அரசு விழாக்களைத் தொகுத்து வழங்கியுள்ளார். சிறந்த எழுத்தாளரான அவர், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். திருவெம்பாவை உள்ளிட்ட ஏராளமான பாடல்கள் குறித்து விளக்கவுரை அளித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை எம்பாமிங் செய்த குழுவில் ஒருவர் சுதா சேஷையன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT