Published : 10 Dec 2018 03:23 PM
Last Updated : 10 Dec 2018 03:23 PM

மேகேதாட்டு: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டாம்; கர்நாடக அரசுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கடிதம்

மேகேதாட்டு அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டாம் என, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று (திங்கள்கிழமை) எழுதிய கடிதத்தில், "மேகேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்க தமிழக முதல்வரைச் சந்திக்க வேண்டி கடந்த 6.12.2018 அன்று கடிதம் எழுதியிருந்தீர்கள்.

தமிழகம் உள்ளிட்ட காவிரி வடிகால் மாநிலங்களின் ஒப்புதல் இன்றி, மேகேதாட்டு திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையத்திடம் இருந்து கர்நாடக அரசு ஒப்புதல் பெற்றது, 16.2.2018 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணானது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் கனவத்திற்கு கொண்டு செல்லப்படாமல் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இப்போது தமிழக அரசிடம் கர்நாடக அரசு மேகேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்கக் கோருவது, கர்நாடகாவுக்கு எதிராக கடந்த 30.11.2018 அன்று தமிழக அரசும், 5.12.2018 அன்று மற்ற மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையைத் தாமதப்படுத்தும். இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது.

அதனால், தமிழக அரசின் அனுமதியின்றி மேகேதாட்டு விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதோ, கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதோ 16.2.2018 அன்று வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது" என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x