Published : 31 Aug 2014 11:16 AM
Last Updated : 31 Aug 2014 11:16 AM
தென் மண்டல எல்.ஐ.சி கடந்த நிதியாண்டைப் போல இந்த நிதியாண்டிலும் வருவாயை ஈட்டுவதில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளதாக தென் மண்டல எல்.ஐ.சி பொது மேலாளர் டி.சித்தார்த்தன் கூறினார்.
தென் மண்டல எல்.ஐ.சி பொது மேலாளர் டி.சித்தார்த்தன் சனிக்கிழமையன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
எல்.ஐ.சி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 1956-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது, இந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதியன்று எல்.ஐ.சி 58-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. காப்பீட்டுத்துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைந்துவிட்ட பிறகும் மக்கள் மத்தியில் எல்.ஐ.சி நல்லாதரவைப் பெற்று வருகிறது. கடந்த ஜுலை 31 நிலவரப்படி எல்.ஐ.சி.யின் பிரீமியம் வருவாய் சந்தை பங்கு 75.42 சதவீதமாக உள்ளது.
மேலும் எல்.ஐ.சி நிறுவனம் பொதுத்துறையில் ரூ.2 லட்சம் கோடியையும், மத்திய மற்றும் மாநில அரசு பாதுகாப்பு காப்பீட்டில் 9 லட்சம் கோடியையும், ஐந்தாண்டு திட்டத்தில் ரூ. 20 லட்சம் கோடியையும் முதலீடு செய்துள்ளது.
கடந்த நிதியாண்டில் தென் மண்டல எல்.ஐ.சி ரூ.3381 கோடி பிரீமியம் வருவாய் ஈட்டி புதிய சாதனை படைத்தது. அதுபோல 2014- 2015 நிதியாண்டில் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தென் மண்டல எல்.ஐ.சி. ரூ.1000 கோடி வருவாய் பெற்று தொடர்ந்து இந்தியாவின் முதல் மண்டலமாக உள்ளது. இந்திய அளவில் திருச்சூர் பிரிவு 31.67 சதவீதம் பட்ஜெட் இலக்கை அடைந்து முதல் இடத்தில் உள்ளது.
இதைத்தொடர்ந்து மண்டல அளவில் தஞ்சாவூர் பிரிவு 48,273 பாலிசிகளின் மூலம் முதல் இடத்தில் உள்ளது. வேலூர் பிரிவுக்குட்பட்ட திருவண்ணாமலை 4500 பாலிசிகள் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி சென்னை பிரிவு 83.24 கோடி வருவாயை பெற்றுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு புதிய திட்டங்கள்
இந்த நிதியாண்டில் 6.5 லட்சம் பாலிசிதாரர்களுக்கு முதிர்வு மற்றும் சேமிப்பு கணக்கின் மூலம் ரூ.2,250 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது மூத்த குடிமக்களுக்காக வரிஸ்தா பென்சன் பீமா யோஜனா மற்றும் ஜீவன் ரக்ஷக் உள்ளிட்ட புதிய திட்டங்களை எல்.ஐ.சி அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT