Published : 25 Jul 2018 03:11 PM
Last Updated : 25 Jul 2018 03:11 PM
தி.நகர் சென்னை சில்க்ஸின் புதிய கட்டிடக் கட்டுமானப் பணிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் திடீர் தடை விதித்துள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் வணிக வளாகங்கள் கட்டவும் தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னை சில்க்ஸின் 9 மாடிக்கட்டிடம் முழுதும் தீக்கிரையானது. பின்னர் கட்டிடம் முழுமையாக இடித்துத் தள்ளப்பட்டது. அதன் பின்னர் அந்தக் கட்டிடத்தை மீண்டும் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.
கட்டிட அனுமதி கடந்த ஜூன் 21-ம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து கட்டிடம் வேகமாகக் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் சிஎம்டிஏ விதிகளுக்கு எதிராக அதே இடத்தில் புதிய கட்டிடத்தைக் கட்டும் பணியை சென்னை சில்க்ஸ் நிர்வாகம் தொடங்கியுள்ளதாகவும், இதற்கு தடை விதிக்கக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த கண்ணன் பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஜூன் 21-ல் அனுமதி வழங்கிய 20 நாளில் 40 சதவீதம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தீ விபத்துக்குள்ளான அதே பகுதியில் புதிய கட்டுமானத்துக்கு எதன் அடிப்படையில் அனுமதியிளிக்கப்பட்டது என சிஎம்டிஏ மற்றும் சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர், அதேபோல அனுமதி வழங்கி 20 நாட்களில் 40% கட்டுமானப் பணிகள் முடிவடைந்தது ஆச்சரியம் அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், சென்னை சில்க்ஸின் புதிய கட்டுமானத்துக்கு தடை விதித்த நீதிபதிகள், குடியிருப்புப் பகுதிகளில் வணிக வளாகங்கள் கட்டவும் தடை விதித்து உத்தரவிட்டனர். இது குறித்து சிஎம்டிஏ தரப்பு ஆகஸ்ட் 3-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT