Published : 31 May 2018 03:29 PM
Last Updated : 31 May 2018 03:29 PM

பாரிமுனையில் ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்தவரிடம் ரூ.1 லட்சம் வழிப்பறி: விரட்டி பிடித்த பொதுமக்கள்

சென்னை பாரிமுனையில் ஏ.டி.எம்மில் பணம் செலுத்த வந்தவரிடம் கத்திமுனையில் 1 லட்சம் ரூபாயை வழிபறி செய்ய முயன்ற நபர்களில் ஒருவரை பொதுமக்கள் துரத்திப்பிடித்து தர்ம அடிகொடுத்தனர்.

மண்ணடியில் வசிப்பவர் சாதிக். இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். வியாபார் நிமித்தமாக தன்னிடம் உள்ள ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்தை தனது கணக்கில் செலுத்த முடிவு செய்தார். இதற்காக ரூ.1 லட்சத்தை தன்னிடம் உள்ள ஒரு லட்சம் ரூபாய் பணத்தை நேற்று மாலை சென்னை பாரிமுனையில் உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம்முக்கு சென்றார்.

ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்தும் எந்திரம் முன் நின்ற அவர் பணத்தை எடுக்கும்போது பக்கத்தில் வாடிக்கையாளர் போல் நின்ற இரண்டு பேர் திடீரென அவரது இடுப்பில் கத்தியை வைத்தனர். அதிர்ச்சியடைந்த சாதிக் அவர்களை பார்க்க மரியாதையாக மொத்தப்பணத்தையும் கொடுத்துவிடு இல்லையென்றால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியவுடன் கைப்பையை பணத்துடன் அவர்களிடம் சாதிக் கொடுக்க அவர்கள் வெளியே சென்றனர்.

தப்பி ஓடிய மர்ம நபர்களை பார்த்து சாதிக் திருடன் திருடன் என்று கூச்சல் எழுப்பவே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.அவர்களில் ஒருவன் சிக்கிக்கொண்டான், இதை பார்த்த பணப்பையை வைத்திருந்த மற்றொரு நபர் அதை கீழே வீசிவிட்டு தப்பி சென்றார். பிடிபட்ட நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட கொள்ளையன் யார்? என்றும் தப்பியோடிய அவரது கூட்டாளி குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏ.டி.எம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவையும் போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். அதிக ஆள் நடமாட்டம் உள்ள மாலை வேளையில் சென்னை பாரிமுனையில் கத்தி முனையில் வழிப்பறி நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x