Published : 30 Apr 2018 08:48 AM
Last Updated : 30 Apr 2018 08:48 AM
ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடுவது சாத்தியமல்ல என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முதலில் நான்தான் போராடினேன். அதற்காக 4 நாட்கள் சிறையில் இருந்தேன். ஸ்டெர்லைட் விஷயத்தில் தமிழகத்துக்கு திமுக துரோகம் செய்தது வைகோவுக்கு தெரியும். கோடிக்கணக்கில் செலவு செய்து திறக்கப்படும் ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளை உடனே மூட வேண்டும் என்றால் அது சாத்தியமில்லை.
மத்திய அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை, தமிழன் என்ற பெயரில் சிலர் தடுக்கிறார்கள். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை பெயர் மாற்றம் செய்யாமல் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமாக மூட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.
தமிழகத்தில் புதிதாக மதுக்கடைகளை திறக்கும் அரசின் முடிவு ஏற்புடையதல்ல. ஒட்டுமொத்த மக்களும் மதுக்கடையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுவிலக்குக்காக பாஜக முயற்சி எடுத்து வருகிறது என்றார் அவர்.
போராட்டத்துக்கு ஆதரவு
இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் நடைபெறும் போராட்டத்தில் நேற்று காலை திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இது 23 ஆண்டுகால போராட்டம். ஜல்லிக்கட்டுக்காக திரண்டது போல், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இளைஞர்கள் கண்டிப்பாக திரளுவார்கள். ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடும் வரை தொடர்ந்து போராடுவோம்’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT