Published : 24 Apr 2018 08:28 AM
Last Updated : 24 Apr 2018 08:28 AM

மருத்துவப் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டார்: பத்திரிகையாளர் குருமூர்த்தியுடன் திடீர் ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அவரை பத்திரிகையாளர் குருமூர்த்தி சந்தித்துப் பேசினார்.

தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நாளை (25-ம் தேதி) நடக்கும் புதிய நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் குறித்து ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என கூறப்பட்டது.

இந்நிலையில், போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு நேற்று வந்த ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி, ரஜினியை சந்தித்துப் பேசினார். அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

ரஜினி பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும் பாஜகவே அவரை இயக்குகிறது என்றும் பலரும் விமர்சித்தனர். இதை ரஜினி மறுத்துவந்த நிலையில், குருமூர்த்தி சந்தித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்து ரஜினி காந்த் மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:

ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து, மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொள்கிறார். அமெரிக்காவில் இருந்து அவர் திரும்பியதும், அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்தனர்

அமெரிக்காவில் நடக்கும் கட்சிக்கான இணையதள வடிவமைப்பு பணியையும் அவர் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x