Last Updated : 17 May, 2024 09:26 PM

 

Published : 17 May 2024 09:26 PM
Last Updated : 17 May 2024 09:26 PM

‘ஒடிபி’யை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க பெற்றோர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வேண்டுகோள்

சென்னை: அரசின் நலத்திட்டங்களைத் தெரிவிக்கவே தொலைபேசி எண் சரிபார்க்கப்படுகிறது. எனவே, ஆசிரியர்களுக்கு ஒடிபி எண்ணை பெற்றோர்கள் தெரிவிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) வலைத்தளத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முழு விவரங்கள் பராமரிக்கப்படுகின்றன. மேலும், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளும் எமிஸ் தளம் வழியாக கண்காணிக்கப்படுகிறது. இதற்கிடையே அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை பெற்றோர்களுக்கு பகிர்வதற்காக வாட்ஸ்-அப் வழியாக புதிய தளத்தை உருவாக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக எமிஸ் தளத்தில் உள்ள 1.12 கோடி மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்கள் ஆசிரியர்கள் மூலம் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை பள்ளி திறப்பதற்கு முன்னர் முடித்துவிடவேண்டுமென கல்வித் துறை தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதேநேரம் தொடர்பு எண் சரிபார்க்கும் போது ‘ஒடிபி’ எனும் ஒரு முறை கடவுச்சொல் எண் பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கு வரும். ஆனால், பாதுகாப்பு கருதி செல்போனுக்கு வரும் ‘ஒடிபி’எண்ணை கொடுக்க பெற்றோர்கள் பலர் தயங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசின் நலத் திட்டங்களை தெரிவிப்பதற்காகவே தொலைபேசி எண்கள் சரிபார்க்கப்படுகிறது. எனவே, ஆசிரியர்களுக்கு ‘ஒடிபி’எண்ணை பெற்றோர்கள் தெரிவிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன், துறை இயக்குநர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘எமிஸ் தளத்தில் உள்ள பெற்றோர்களின் செல்போன் எண்கள் சரிபார்ப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் தொடர்பு எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு சீருடைகள், பாடப்புத்தகங்கள் உட்பட பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

இதையடுத்து எஞ்சியுள்ள தொலைபேசி எண்களின் சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பெற்றோர்களின் அச்சத்தை தவிர்க்கும் விதமாக அவர்களை தொடர்பு கொண்டு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்படும் இந்த முயற்சிக்கு பெற்றோர்களும் ஆதரவளிக்க வேண்டும்’, என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x