Published : 04 May 2024 05:45 AM
Last Updated : 04 May 2024 05:45 AM

மதுரை மாநகராட்சியில் ஆணையருக்கு தெரியாமல் கட்டிட நிறைவு சான்றிதழ் - தீவிர விசாரணை

மதுரை: மதுரை மாநகராட்சியில் ஆணையர், நகரமைப்பு அதிகாரிகளுக்குத் தெரியாமல் நகரமைப்புக் குழு தனியார் கட்டிட கட்டுமானங்களுக்கு ‘பணி நிறைவு சான்றிதழ்’ வழங்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 2 ஆயிரம் சதுர அடி வரை கட்டப்படும் வணிகக் கட்டிடங்களுக்கு மாநகராட்சியும், அதற்கு மேல் கட்டினால் உள்ளூர் திட்டக் குழுமத்திடமும் வரைப்பட அனுமதி பெற வேண்டும். நகர் பகுதிகளில் மக்கள் அதிகம் வந்து செல்லும் வணிக கட்டிடங்களில் போதுமான ‘பார்க்கிங்’, பாதுகாப்பு வசதி இல்லை.

கடந்த காலத்தில் இந்த கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக கூறி, மாநகராட்சி நிர்வாகங்கள் அந்தக் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அந்தக் கட்டிடங்களை முறைப்படுத்தவும் முயற்சிக்க வில்லை. இதனாலேயே விதி மீறல் கட்டிடங்கள் உருவாகின்றன.

அதனால், நகர்புற சாலைகளில் அடிப்படை கட்டமைப்பு வசதி இன்றி உரிய அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதை தடுக்க ஊராட்சி முதல் மாநகராட்சி பகுதியில் கட்டப்படும் வணிக கட்டிடங்களுக்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் பணி நிறைவு சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ஆனால், மதுரை மாநகராட்சியில் தற்போதைய ஆணையர் தினேஷ்குமார் வருவதற்கு முன்பு இந்த நடைமுறையைப் பின்பற்றாமல் தனியார் கட்டிடங்களுக்கு நகரமைப்புக் குழுவே கட்டிட நிறைவு சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாக இயக்குநர், நகரமைப்பு நிலைக்குழுத் தலைவருக்கு கடந்த பிப். 6-ல் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸில், வணிகக் கட்டிட கட்டுமான நிறைவுச் சான்றி தழ் மாநகராட்சி நகரமைப்பு அபிவிருத்தி மேல் முறையீட்டு நிலைக்குழு தலைவரால் வழங்கப்பட்டுள்ளது என்றும், இது தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும்.

தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், தங்கள் விளக்கத்தை 7 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை தற்போது நடந்து வருகிறது.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நகராட்சி நிர்வாக இயக்குநர், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, அதிகாரியின் ஒப்புதலின்றி கட்டிட நிறைவுச் சான்றிதழ் வழங்கக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி நகரமைப்பு குழுத் தலைவர் மூவேந்திரனிடம் கேட்டபோது, ‘‘ஏற்கெனவே கட்டிய கட்டிடத்தில் கூடுதலாக குளியலறை, சிறிய அறை கட்டினால், அந்தக் கட்டுமானத்துக்கான கட்டிட நிறைவுச் சான்றிதழை வழங்கும் அதிகாரம் நகரமைப்புக் குழுத் தலைவருக்கு உள்ளதாக நீதிமன்ற உத்தரவு உள்ளது.

அதைப் பின்பற்றியே, எனக்கு முன்பு இருந்த குழுத் தலைவர் அனுமதி வழங்கி உள்ளார். நானும் கடந்த கால நடைமுறையைப் பின்பற்றி முறைப்படி கட்டிட நிறைவுச் சான்றிதழை வழங்கினேன். என்னிடம் நகராட்சி நிர்வாக இயக்குநர் கேட்ட விளக்கத்துக்கு உரிய பதில் அளித்து விட்டேன் என்று கூறினார்.

மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இந்தச் சம்பவம், ஆணையர் தினேஷ் குமார் வருவதற்கு முன்பு நடந் தது, அந்த விவரம் முந்தைய ஆணையருக்குத்தான் தெரியும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x